சினிமா
பிரித்விராஜ்

படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா

Published On 2020-10-20 08:38 GMT   |   Update On 2020-10-20 08:38 GMT
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வந்தது. 



இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நடிகர் பிரித்விராஜுக்கும், இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியதாகவும், தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன் என நம்புவதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News