சினிமா
ரம்யா கிருஷ்ணன்

'குயின்' ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை இல்லை - ரம்யா கிருஷ்ணன்

Published On 2020-06-07 06:56 GMT   |   Update On 2020-06-07 06:56 GMT
'குயின்' ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாகும் வெப் தொடர் இல்லை என நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கவுதம் மேனன், பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து இயக்கிய வெப் தொடர் குயின். இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நடிகையாக இருந்து ஆளுமைமிக்க அரசியல்வாதியாக உயரும் ஒரு பெண்ணின் கதை தான் குயின். மேலும் இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை என்று சொல்லப்பட்டது. அதேபோல் தான் இத்தொடரில் இடம்பெறும் ரம்யா கிருஷ்ணனின் ஷக்தி சேஷாத்ரி கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இது ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கதை இல்லை என நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இது அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் வெப் தொடர். ஜெயலலிதாவின் கதையைப் போல ஒத்து இருந்ததால் இந்தத் தொடர் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு ஜெயலலிதாவின் துணிச்சலும், உண்மையான குயின் போல் அவர் இருந்ததும் மிகவும் பிடிக்கும்.



கதைப்படி இன்னும் அந்தக் கதாபாத்திரம் முழு அரசியல்வாதி ஆகவில்லை. முதல் பாகத்தில் அவர் அந்த நிலை வரை செல்கிறார். இன்னும் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதில் பங்கேற்க நான் ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் அதிக ஆக்‌ஷன், பரபரப்பான காட்சிகள் இந்த 2-ம் பாகத்தில் மக்கள் எதிர்பார்க்கலாம் .

தற்போது நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. கடைசியாக நான் இந்த தொடரின் கதாசிரியர் ரேஷ்மாவுடன் பேசியபோது, அவர் 2-ம் பாகத்திற்கான திரைக்கதையை முடிந்துவிட்டதாக தெரிவித்தார். ஷுட்டிங் செல்ல அனைத்தும் தயார். ஆனால் இந்த லாக்டவுனை பொறுத்துதான் அது உள்ளது". இவ்வாறு ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
Tags:    

Similar News