சினிமா
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அடுத்ததாக அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.
இதையடுத்து சிம்புவை வைத்து மிஷ்கின் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. சிம்பு பிற படங்களில் பிசியாக உள்ளதால் அதனை முடித்துவிட்டு நடிப்பதாக சொல்லிவிட்டாராம். அந்த இடைவெளியில் அருண்விஜயை வைத்து படம் இயக்க முடிவெடுத்த மிஷ்கின், தற்போது அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மிஷ்கின்-அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படம் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. அஞ்சாதே படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் அடுத்த பாகத்தை மிஷ்கின் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.