சினிமா
விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலர் நிதி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் பெப்சிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார்.
இதுதவிர பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி வழங்கினார். அண்மையில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம், நிதியுதவி அறிவித்துள்ளார். இந்த சங்கத்தில் நலிவடைந்த பல விநியோகஸ்தர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவும்படி சங்க தலைவர் டி.ராஜேந்தர் கேட்டுக்கொண்டதையடுத்து லாரன்ஸ் உதவியுள்ளார்.