சினிமா
பெப்சி தொழிலாளர்களுக்கு கமல், ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்காக நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திரையுலகமே மூடப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட தொழிலாளர்கள், துணை நடிகர்-நடிகைகள் வேலை இழந்து கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு பலர் உதவி வருகிறார்கள். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பெப்சிக்கு நிதி வழங்கினர். நடிகர் கமல்ஹாசன் ரூ.10 லட்சம் வழங்குகிறார். டைரக்டர் ஷங்கர் ரூ.10 லட்சமும், தயாரிப்பாளர் லலித் ரூ.10 லட்சமும் வழங்கினர். நடிகர் சங்கத்துக்கு நடிகர் பொன்வண்ணன் ரூ.25 ஆயிரமும், பூச்சி முருகன், சத்ய பிரியா ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி இருக்கிறார்கள்.
திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்துக்கு நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கி உள்ளார். மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு தயாரிப்பாளர் தாணு 250 மூட்டை அரிசியும், நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியும், நடிகை ரோஜா 100 மூட்டை அரிசியும், நடிகர் ராதாரவி 12 மூட்டை அரிசியும், ஜெய்வந்த் 10 மூட்டை அரிசியும் வழங்கி உள்ளனர். மேலும் பலர் உதவி வழங்கி வருகிறார்கள்.