சினிமா
விஜய் சேதுபதி - காயத்ரி ரகுராம்

விஜய் சேதுபதி பேச்சுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்

Published On 2020-03-17 11:42 GMT   |   Update On 2020-03-17 11:42 GMT
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டி விழாவில் நடிகர் விஜய்சேதுபதிக்கு பேச்சுக்கு நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “கொரோனாவை விட தற்போது இன்னொரு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி வருடங்களாக இருக்கிறது.

சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மகாமனிதனைப் படைக்கவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்.

சாமியை சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. யாராவது சாமி பற்றியோ என்னுடைய மதம் இப்படிச் சொல்கிறது என்று பேசினால் பதிலுக்கு என்னுடைய மதம் இப்படி சொல்கிறது என்று பேசாதீர்கள். அதற்கு பதில் மனிதத்தையும், மனித நேயத்தையும் கற்றுக் கொடுங்கள்.

கடவுள் மேல இருக்கான். பூமியில் வாழும் மனிதர்கள் நாம் தான் ஒவ்வொருவருக்கும் பக்கபலம். இது மனிதன் வாழ்வதற்கான இடம். சகோதரத்துவத்தோடு சந்தோ‌ஷமாக வாழுங்கள். அன்பை மட்டுமே பகிர்ந்து வாழுங்கள். மதத்தைச் சொல்லி கடவுளை பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் மதம் என்பது கிடையாது” என்று பேசியிருந்தார்.



விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது, “இன்னொரு மனிதரை நம்புவதற்கு வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கிலான நம்பிக்கையாளர்கள் உள்ளனர். நாங்களெல்லாம் ஊமை என்று நீங்கள் நினைத்தால் மன்னித்து விடுங்கள்.

எளிதில் பொய் சொல்லக்கூடிய வெறுக்கக் கூடிய மற்றொரு மனிதனை நீங்கள் நம்புவதற்கு சாரி. வாழ்க்கை கடவுளால் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமனிதன் மூலம் தான் இன்னொரு மனிதனுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பொய். மனிதனின் வெற்றி கடவுள் கையில் தான் உள்ளது. எனவே நான் மனிதனை விட கடவுளைத் தான் நம்புவேன்’ என்று கூறினார்.

இதையடுத்து காயத்ரி ரகுராம், விஜய் சேதுபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்து டுவிட் செய்திருக்கும் காயத்ரி, “நான் விஜய் சேதுபதியின் பேச்சைக் கண்டிக்கவில்லை. அவர் சுதந்திரமாக பேசுவது தான் ஜனநாயகம். நான் அவருடைய கருத்தில் ஒத்துப் போகவில்லை. அது என்னுடைய சுதந்திரம்.

எல்லோரும் கடவுளை நம்புவதை நிறுத்த வேண்டுமென்று, விஜய் சேதுபதி சொல்லவில்லை. கடவுள் நம்பிக்கையாளர்களை நம்புவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மதச்சார்பின்மை என்ற பெயரில் பகுத்தறிவாளர்கள் விஜய் சேதுபதியின் பேச்சை விரும்புவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News