சினிமா
சினிமாவில் தனி அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சி - சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சினிமாவில் தனி அடையாளம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. தமிழில் வெற்றி பெற்ற ‘96’ படத்தை தெலுங்கில் சமந்தா நடிக்க ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்து, வெளியிட்டு தோல்வி அடைந்தது. ஆனாலும் தொடர்ந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் வருகின்றன.
அவர் அளித்த பேட்டி வருமாறு:- எந்த வயதில் எது நடக்க வேண்டுமோ அது அந்தந்த வயதில் நடக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதையே கொஞ்சம் மாற்றி எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது. எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும்.
சினிமாவுக்கு வந்த புதிதில் இன்னும் அதிக வாய்ப்புகள் வரவில்லையே என்ற நிராசை இருந்தது. ஆனால் இப்போது திரும்பி பார்த்தால் எனது வயதுக்கு ஏற்ற படங்களைத்தான் அப்போது செய்து இருக்கிறேன் என்பது புரிகிறது. அப்போதே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து இருந்தால் என்னை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.
கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டே எனது முத்திரையை பதிக்க முயற்சி செய்தேன். அதனால்தான் தனி அடையாளத்தை பெற முடிந்தது. அதற்கு 10 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. எதற்கும் பொறுமை வேண்டும். அப்போது ஆவேசப்பட்டாலும் இப்போது சினிமாவில் எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது”.
இவ்வாறு சமந்தா கூறினார்.