சினிமா
கமல்ஹாசன்

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள் - கமல் அவசர வழக்கு

Published On 2020-03-17 06:47 GMT   |   Update On 2020-03-17 06:47 GMT
இந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையின் போது காவல்துறையினர் துன்புறுத்துவதாக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். 22 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கமல், ‌ஷங்கர் இருவரும் திட்டமிட்டனர். லைகா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு தொடங்கியது. கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.

பாராளுமன்ற தேர்தலில் கமல் பிரசாரம் காரணமாக இடையில் சிலகாலம் தடை பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. 



இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ‌ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார். விபத்து நடந்தது குறித்து மீண்டும் மீண்டும் நடித்துக்காட்ட மத்திய குற்றப்பிரிவினர் வற்புறுத்துவதாக கமல் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News