சினிமா
மீண்டும் இணையும் சிம்பு - விஜய்சேதுபதி?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்புவும் விஜய்சேதுபதியும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு தன்னுடைய தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான 'உறவை காத்த கிளி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வெள்ளித்திரையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். `மாநாடு' படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்சன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
மாநாடு படத்தை தொடர்ந்து சேரன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய்சேதுபதியும், நடிக்கப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படம், மிக பிரமாண்டமான முறையில் தயாராகப்போவதாக பேச்சு அடிபடுகிறது. இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் இன்னும் முடிவாகவில்லை. சிம்புவும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.