சினிமா
அர்ச்சனா கல்பாத்தி

வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்

Published On 2020-02-12 06:46 GMT   |   Update On 2020-02-12 06:52 GMT
‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கப்பகுதியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அன்புச்செழியன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 



சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. நடிகர் விஜய் நேற்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் அவரது ஆடிட்டர் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.  
Tags:    

Similar News