சினிமா
வாள் மூலம் கேக் வெட்டிய துனியா விஜய்

வாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-01-24 09:34 IST   |   Update On 2020-01-24 09:36:00 IST
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வாள் மூலம் கேக் வெட்டிய நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவருக்கு கடந்த 20-ந் தேதி பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், ரசிகர்களுடன் நீண்ட வாள் மூலம் கேக் வெட்டி நடிகர் துனியா விஜய் கொண்டாடினார். 

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறையான அனுமதி பெறாமல் வீட்டுமுன்பு பந்தல் அமைத்திருந்ததாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் நடிகர் துனியா விஜய் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.



இதையடுத்து, நீண்ட வாள் பயன்படுத்தியது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கோரி நடிகர் துனியா விஜய்க்கு கிரிநகர் போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்பேரில், கிரிநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி நடிகர் துனியா விஜய் விளக்கம் அளித்திருந்தார். 

இந்த நிலையில், நீண்ட வாளை பயன்படுத்தி கேக் வெட்டிய விவகாரத்திலும், அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி நடிகர் துனியா விஜய் மீது கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News