சினிமா
சிரஞ்சீவி படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் சிரஞ்சீவியின் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
அனுஷ்கா பிரபல ஹீரோக்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தாலும் பாகுபலி பெரிய அளவில் அவரை உயர்த்தி பிடித்தது. இது சரித்திர பின்னணியிலான படம். அதேபோல் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையாக அமைந்தது. சிரஞ்சீவி நடித்த சை ரா நரசிம்ம ரெட்டி சரித்திர படத்திலும் ராணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் சரித்திர கதை அம்சம்முள்ள கதைகளில் நடிக்க அவரை தேடி நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. இதில் குழப்பத்தில் ஆழ்ந்தார். தற்போதைக்கு சரித்திர படத்தை ஒதுக்கி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். வணிக ரீதியிலான படங்களில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார் அனுஷ்கா. அந்த வகையில் காதுகேளாத மாற்றுத்திறனாளியாக நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் கமர்ஷியல் படமொன்றில் நடிக்க அப்பட இயக்குனர் கெராட்டாலா சிவா அணுகியபோது ஏற்க மறுத்துவிட்டார் அனுஷ்கா. அதேசமயம் கவுதம் மேனன் அடுத்து இயக்க உள்ள தமிழ், தெலுங்கு படமொன்றில் நடிக்க கேட்டதும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையாக உருவாகிறது. 90களின் காலகட்டத்தில் நடப்பதுபோன்று இக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதை தற்கால சூழலுக்கு ஏற்ப கவுதம் மேனன் மாற்றி படமாக்க உள்ளாராம்.