சினிமா
சிவகார்த்திகேயன்

சிக்கலில் இருந்து மீண்ட ஹீரோ

Published On 2019-11-25 03:14 GMT   |   Update On 2019-11-25 03:14 GMT
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படம் சிக்கலில் இருந்து மீண்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வித்தியாசமான புரமொஷனில் களமிறங்கியுள்ள ஹீரோ படக்குழு பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த படத்துக்கு எதிராக டி.எஸ்.ஆர். பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடனாக பெற்ற ரூ.10 கோடியை 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் வட்டியுடன் திரும்பி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஹீரோ படத்துக்கு கோர்ட்டு தடை விதித்தது. ஹீரோ படத்துக்கும் 24 ஏஎம் பட நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டது. 



ஆனாலும் இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது இதில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “டி.எஸ்.ஆர். பட நிறுவனத்திடம் பேசி ஹீரோ படம் சம்பந்தமான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. டிசம்பர் 20-ந்தேதி ஹீரோ படம் திரைக்கு வரும். இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன” என்று குறிப்பிட்டு உள்ளது.
Tags:    

Similar News