சினிமா
உபேந்திரா மூலம் கன்னடத்தில் கால் பதிக்கும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், உபேந்திரா மூலம் கன்னட மொழியில் அறிமுகமாக இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். அவர் கூறியதாவது:-
“கதாநாயகியாக 10 வருடங்கள் நடித்து முடித்து விட்டேன். இப்போதும் அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. தொடர்ந்து பிசியாகவே இருக்கிறேன். 10 வருடத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களை திரையில் பார்க்கும் ரசிகர்களும் என்னோடு வேலை செய்பவர்களும் புரிந்து இருப்பார்கள்.
சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் சக்தி அனுபவத்தால் வந்து இருக்கிறது. அதே மாதிரி கதை தேர்விலும் அனுபவம் வந்து இருக்கிறது. 50 படங்களை தாண்டி விட்டேன். 100 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சிய கனவாக இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் இருந்தால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது.
நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாகவே பார்க்கிறேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். இந்தி படங்களும் உள்ளன. ஆனால் கன்னட மொழியில் இதுவரை நடிக்கவில்லை. தற்போது உபேந்திரா கதாநாயகனாக வரும் கப்சா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். கன்னடத்தில் இது எனக்கு முதல் படம். ஆனாலும் இந்த படத்தை 7 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.