சினிமா
சர்வதேச திரைப்பட விழா- தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில், 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியை விழாக்குழுவைச் சேர்ந்த நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், மனோபாலா உள்ளிட்டோரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை 17 வது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்க வருமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு வரை அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 75 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.