சினிமா
பிரசாந்தி

நடிகை சட்டவிரோதமாக சிறை வைப்பு- போலீசுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

Published On 2019-11-18 02:04 GMT   |   Update On 2019-11-18 02:04 GMT
கடல் குதிரை படத்தின் கதாநாயகியை போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன்.

1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி என்ற 20 வயது இளம் பெண் அறிமுகமானார். இவரது பெற்றோர் இலங்கை அகதி என்று முறையாக தமிழக அரசிடம் பதிவு செய்துள்ளனர். முதலில் ஊரபாக்கத்திலும், பின்னர் வளசரவாக்கத்திலும் வசித்தனர். பிரசாந்தி என்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் பிரசாந்தியும், அவரது தாயாரும் எனக்கு போன் செய்து அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழுதனர். 

நான் அவர்களை மெரினா கடற்கரை, காந்திச்சிலை முன்பு சந்தித்து பேசியபோது, கியூ பிரிவு பெண் போலீஸ் அதிகாரி தனக்கு போன் செய்து, பேசி விட்டு, கடைசியில் மாதவிலக்கு தேதி குறித்து விசாரித்தார் என்று பிரசாந்தி கூறி அழுதார். இனிமேல் அந்த அதிகாரி போன் செய்தால், என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.



பாலகணேசன் என்பவருக்கு எதிராக பிரசாந்தி கடந்த ஜூன் மாதம் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த, பிரசாந்தி நேரில் வரவேண்டும் என்று வடபழனி சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆகஸ்டு மாதம் சம்மன் அனுப்பியுள்ளார். அதன்பின்னர் கியூ பிரிவு போலீசார், வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரசாந்தியிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். இதுகுறித்து என்னிடம் போனில் பிரசாந்தி கூறினார். அவரை நேரில் வரும்படி கூறினேன்.

அதன்பின்னர் அவரையும், அவரது பெற்றோரையும் காணவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, பல மாதங்களாக பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் சட்டவிரோதமாக கியூ பிரிவு போலீசார் பிடித்து, மர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக கியூ பிரிவு போலீஸ் பிடியில் உள்ள பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த தமிழக டி.ஜி.பி., கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News