சினிமா
பரவை முனியம்மாவை சந்தித்து உதவி செய்த அபி சரவணன்
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து நடிகர் அபி சரவணன் உதவி செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பரவை பகுதியைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா (வயது 85). நாட்டுப்புற பாடகியான இவர், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘தூள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவை முனியம்மா பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து சினிமாவில் பிஸியான பரவை முனியம்மா 80-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தார். இறுதியாக 2014-ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கினார்.
அதன் மூலம் மாதந்தோறும் ரூ6 ஆயிரம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையறிந்த நடிகர் அபி சரவணன், பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி, துணிகள், தேவையான பொருட்கள், பணம் ஆகிய உதவிகளை செய்திருக்கிறார். மேலும் மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும் கூறியிருக்கிறார்.