சினிமா
பிகிலுக்கு அரசியல் நெருக்கடி இல்லை- அர்ச்சனா கல்பாத்தி
பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியது. வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், “பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்” என்றார்.