சினிமா
மோகன்லால், ஜாலி தாமஸ், டினி டேனியல்

கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை சம்பவம் படமாகிறது

Published On 2019-10-11 07:46 IST   |   Update On 2019-10-11 07:46:00 IST
மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு மலையாளத்தில் சினிமாவாக உருவாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் ஏற்கனவே பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் கேரளாவை உலுக்கிய சயனைடு கொலைகள் சினிமா படமாகிறது. அங்குள்ள கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாய் கிராமத்தை சேர்ந்த ஜாலி தாமஸ் என்ற பெண், கணவர் ராய் தாமசுடன் வாழ பிடிக்காமல் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து குடும்பத்தையே தீர்த்து கட்டி உள்ளார். 

முதலில் மாமியார் அன்னம்மாவுக்கு மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றார். தொடர்ந்து மாமனார் டாம் தாமஸ், கணவர் ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ, கள்ளக்காதலன் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத குழந்தை ஆகியோரை கொன்று விட்டு 2017–ல் சாஜுவை திருமணம் செய்து கொண்டார். சொத்துகளையும் தனது பெயருக்கு எழுதிக் கொண்டார். ஜாலியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தொடர் கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 



இந்த சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் 2 படங்கள் தயாராகின்றன. ஒரு படத்தை திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் கொலைகள் குறித்து விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இன்னொரு படத்தை ரோனேக்ஸ் பிலிப் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘கொலபாத கண்களூ டே ஒன்னா பத்தி தண்டு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் டினி டேனியல், சயனைடு கொலைகள் செய்த ஜாலி வேடத்தில் நடிக்கிறார்.

Similar News