சினிமா
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் பட தலைப்புக்கு மீண்டும் சிக்கல்

Published On 2019-10-03 02:16 GMT   |   Update On 2019-10-03 02:16 GMT
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’ஹீரோ’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ. இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 20ந் தேதி ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹீரோ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

டிரைபல் ஆட்ஸ் நிறுவனம் சார்பில் எம்.மணிகண்டன் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நான் ‘டிரைபல் ஆட்ஸ்’ நிறுவனம் சார்பில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017 அன்று ‘ஹீரோ’ என்ற படத் தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன்.

‘ஹீரோ’ என்ற எங்களது தலைப்பில் ஆமந்த் அண்ணா மலையின் எழுத்து- இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான செய்திகள் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.



இந்த சூழ்நிலையில் தமிழ் மொழியில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகியபோது அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப் பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக்கூடாது என்று கவுரவ செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.

ஆனால் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர். ஆகவே இந்த கடிதத்தின் வாயிலாக கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News