சினிமா
நயன்தாரா படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள நெற்றிக்கண் படத்தில் வடசென்னை பட பிரபலம் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வட சென்னை படத்தில் நடித்து பிரபலமான சரண் சக்தி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜில்லா, கடல் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர் சகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தற்போது கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.