சினிமா
30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தேன் - கமல்ஹாசன்
30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் உத்தரவை பிறப்பித்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் சாலையின் இருபுறமும், சாலைத் தடுப்புகளிலும் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இனிமேல் கட்சி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பேனர் விவகாரம் குறித்து பேசியதாவது:- சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. என் படத்துக்காக கட் அவுட் வைக்க முயற்சித்த ரசிகர் தவறி மேல் இருந்து விழுந்துவிட்டார். விழுந்த இடத்தில் கூரான கம்பிகள் இருந்ததால் அவை கழுத்தில் குத்தி இறந்துவிட்டார்.
அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல போனேன். அப்போது அந்த ரசிகரின் அம்மா தனது மகன் பற்றி கூறியது கலங்க வைத்தது. என் மீது அந்த ரசிகருக்கு எவ்வளவு பிரியம் என்பதை விளக்கினார்கள். அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்த உடனேயே ரசிகர்ளிடம் இனி கட் அவுட் வைப்பதோ பால் அபிஷேகம் செய்வதோ கூடாது என்று கடும் உத்தரவை பிறப்பித்தேன்’. இவ்வாறு அவர் கூறினார்.