சினிமா
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தில் இந்தி நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளார்.
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கைகோர்த்துள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த 2 வீரர்கள் பற்றிய கதை இது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படத்தை 2020-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார் ஆலியா பட். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் கரன் ஜோஹர் மூலம் சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ராஜமவுலி ஆகியோர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது எனக்கு முக்கியமல்ல. அவருடன் பணியாற்றுவதே எனக்கு போதும். தெலுங்கில் பேச பயிற்சி எடுத்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த மாதம் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் ஆலியா பட் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.