சினிமா
தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினியுடன் தேங்காய் சீனிவாசன் பேரன்
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா மூன்றாவது முறையாக அவருடன் இணைந்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்குப்பின் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் ‘தர்பார்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
ரஜினியின் ஆரம்பகால படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர்கள் கூட்டணியில் உருவான தில்லு முல்லு படம் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாப்படுகிறது. தர்பார் படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யா சிவ்பிங்க் இணைந்துள்ளார்.
இவர் 2.0, பேட்ட ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோரோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை ஆதித்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜெய்ப்பூரில் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்றும், வசனம் பேசும் காட்சிகளும் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது படக்குழு மும்பையை மீண்டும் மையமிட்டுள்ளது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ந்தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.