சினிமா
சினிமாவில் கதை தான் ஹீரோ- திருநாவுக்கரசர் எம்.பி.
படைப்பாளன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய திருநாவுக்கரசர், சினிமாவில் கதை தான் ஹீரோ என்று தெரிவித்துள்ளார்.
எல். எஸ். பிரபுராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படைப்பாளன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை தனியார் திரையரங்கில் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், காங்கிரஸ் பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு உறுப்பினர் சினேகன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் திருநாவுக்கரசர் பேசியதாவது: எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க வேண்டும் என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதி இருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சினை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்த படத்தின் இயக்குநர்
தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதைதான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச்
சொல்லியும் இருக்கிறார்.
அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள இந்த படம் சினிமாவில் நடக்கும் கதைத்திருட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரொம்ப சிறப்பாக இருக்கு. அது நடப்பில் இருக்கும் விஷயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.
இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவவலி மாதிரி தான். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும். அதனால் இதை பரிசீலிக்கலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது’ இவ்வாறு அவர் பேசினார்.