சினிமா
தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதிய படங்களை சட்ட விரோதமாக பதிவேற்றும் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து இணையதளத்தில் புதிய படங்கள் உடனுக்குடன் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலை வலியாக உள்ளது. இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டன.
ஆனாலும் பலன் இல்லை. ரஜினிகாந்தின் கபாலி, காலா, பேட்ட ஆகிய படங்கள் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளியானது. இதுபோல் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளிவந்தன. இதை கட்டுப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் பதிவு செய்யபட்டுள்ள இணைய முகவரிகளை முடக்குவதற்கு மத்திய தொலைத் தொடர்பு துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.