சினிமா
கொலை மிரட்டல் எதிரொலி டுவிட்டரில் இருந்து அனுராக் காஷ்யப் விலகல்
குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததையடுத்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார்.
கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு, திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கடிதம் ஒன்றை கடந்த ஜூலை 23-ம்தேதி எழுதியிருந்தனர். பிரதமருக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பும் கையெழுத்திட்டிருந்தார்.
இதனால், டுவிட்டரில் அவரை டேக் செய்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் கடைசியாக சில பதிவுகளை இட்ட அவர், `உங்கள் பெற்றோர்களுக்கு போன்கால்கள் மூலம் கொலைமிரட்டல் வருவது மற்றும் உங்கள் மகள் ஆன்லைன் ட்ரோல்களுக்கு இலக்காவது ஆகியவை குறித்து யாரும் பேச நினைக்க மாட்டார்கள். இதற்கு எந்த ஒரு காரணமும் இருக்கப் போவதில்லை. குண்டர்களே ஆளப்போகிறார்கள்.
மற்றொரு பதிவில், `நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். டுவிட்டரை விட்டு நான் வெளியேற இருப்பதால் இதுதான், எனது கடைசி டுவீட்டாக இருக்கும். மனதில் நினைப்பதை அச்ச உணர்வின்றி பேச அனுமதிக்கப் படாதபோது, பேசாமலே இருக்கப் போகிறேன். விடை பெறுகிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.