சினிமா
இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்று பெயர் பெற்ற கிஷோர் குமார்
அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார் கிஷோர் குமார்.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்ஷன்ஸ்” தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. இதில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார்.
அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார் கிஷோர் குமார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தை போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கூறினார்.
அறிமுகமான படம் வெளியாகும் முன்னே பாராட்டுகளை பெற்று வரும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா” படங்களின் ஒளிப்பதிவாளரான முரளியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.