சினிமா
சமுத்திரகனி

சம்பளம் வாங்காமல் நடித்த படம் மூலம் சம்பாதிக்கிறார்கள்- சமுத்திரகனி வேதனை

Published On 2019-08-08 06:49 GMT   |   Update On 2019-08-08 06:49 GMT
நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்காமல் நடித்த சாட்டை படம் மூலம் இன்று யார் யாரோ சம்பாதிப்பதாக சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி மகன் பிரபுதிலக் தயாரித்துள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பிராமையா ஆகியோருடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா உள்பட பலர் நடித்துள்ளனர் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.



இந்த நிலையில், அடுத்த சாட்டை இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, ‘சாட்டை படத்தில் நன்றாக நடித்தோம். படம் ஹிட். ஆனால் படத்தில் நடித்த நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. அந்த படம் மூலம் இன்று யார் யாரோ சம்பாதிக்கிறார்கள். அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது.

சாட்டை படத்தில் நடித்த போதே பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தன. அந்த படத்தில் காட்டியது அப்படியே ஆசிரியர் பகவான் வி‌ஷயத்தில் நடந்தது. அதை டிவியில் பார்த்ததும் அடித்து பிடித்து அவர் எண்ணை வாங்கி பேசினேன். அவருடனான நட்பு இன்றும் தொடர்கிறது. அவருடைய அனுபவங்கள் பல வி‌ஷயங்களை எனக்கு கொடுத்தது.



அவர் எழுதிய புத்தகத்தில் பல கேள்விகள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு படமாக எடுக்கலாம். அடுத்த சாட்டை படம் அதில் ஒன்றுதான். இந்த படம் வெளியானால் எந்த ஆசிரியரும் தன் மாணவனை வகுப்பை விட்டு வெளியேபோ என்று சொல்லமாட்டார்’

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ரூட்டு தல வி‌ஷயத்தில் கடும் நடவடிக்கைகள் எடுத்து, மாணவர்களை நல்வழிப்படுத்திய சென்னை அம்பத்தூர் போலீஸ் இணை ஆணையர் ஈஸ்வர், பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.
Tags:    

Similar News