சினிமா
வடசென்னை படத்திற்கு பின் நடிக்காதது ஏன்?- ஆண்ட்ரியா விளக்கம்
வடசென்னைக்கு பின் புதிய திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது ஏன் என்பது குறித்து ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்ட்ரியா வருடத்துக்கு 4, 5 படங்களில் நடித்தார். 2007-ல் 5 படங்களில் நடித்து இருந்தார். கடந்த வருடம் விஸ்வரூபம்-2, வடசென்னை ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. சமூக வலைத்தளத்திலும் கருத்துகள் பதிவிடாமல் இருந்தார். இதனால் சினிமாவை விட்டு விலகி விட்டாரா? என்று பேச்சுகள் கிளம்பின.
இந்த நிலையில் ஓய்வெடுத்த காரணங்களை இன்ஸ்டாகிராமில் விளக்கி அவர் கூறியிருப்பதாவது:- “எனக்கு இருந்த மன அழுத்தம் உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் நடிப்பதை நிறுத்திவிட்டு சில காலம் விலகி இருந்தேன். பிரச்சினைகளில் இருந்து விடுபட ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். காபி குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுப்பது எளிதான காரியமாக தெரியவில்லை.
ஆனாலும் மருத்துவ சிகிச்சையில் கஷ்டப்பட்டு என்னை ஈடுபடுத்தினேன். காலையில் ஒரு கப் மூலிகை தேநீர் அருந்திவிட்டு யோகா செய்து அன்றைய நாளை தொடங்கினேன். அந்த சிகிச்சை முறை பலவீனமான இதயம் உள்ளவர்களால் கடைப்பிடிக்க முடியாது. நான் சிகிச்சையின்போது அங்கிருந்து வெளியேறி விட நினைத்தேன். ஆனாலும் அந்த உணர்வில் இருந்து மீண்டு மருத்துவர்கள் ஆலோசனையை பின்பற்றி நடந்தேன். இப்போது என்னை புதியவளாக உணர முடிகிறது. மருத்துவ குழுவினருக்கு நன்றி.
இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.