சினிமா
ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு - பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
பள்ளி விழாவில் பேசிய பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு என்று கூறியிருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி (இன்று) அறிமுகம் செய்தது.
கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.
அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபால் அவர்களும் கலந்துக் கொண்டார்.
லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ‘நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு நான் ஒரு ரசிகன்.
லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன்.
லிடியனின் தந்தை பார்க்கும் போது என் தந்தை நியாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.