சினிமா
விஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் கைது
நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் வடிவேலு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பிரபல நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலு (வயது 56) என்பவர் தனது குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லி தருவதாக ரூ.86 லட்சம் வாங்கினார் என்றும், கருங்கல் ஜல்லி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் மல்லிகா ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
புகார் கூறப்பட்ட வடிவேலு நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.