சினிமா

தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்

Published On 2018-06-01 07:45 GMT   |   Update On 2018-06-01 07:45 GMT
தன் மகனை வைத்து படம் இயக்கி வரும் தம்பி ராமய்யா, புதிய முயற்சியாக இப்படத்திற்கு இசையமைத்து அதில் ஒரு பிரபல இசையமைப்பாளரையும் பாட வைத்திருக்கிறார்.
`மனுநீதி,' `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' ஆகிய படங்களை டைரக்டு செய்த தம்பி ராமய்யா, குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். இவருடைய மகன் உமாபதி, `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அடுத்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, `மணியார் குடும்பம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் பொறுப்புகளை கவனித்து வந்த தம்பி ராமய்யா, பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். `மணியார் குடும்பம்' படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

``இது, வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில், ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவள் வந்த பின், அவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது? என்பதே கதை.


என் மகன் உமாபதி நடித்துள்ள 2-வது படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக, 5 மாதங்களாக நான் நடிக்கவில்லை. இதில், உமாபதி ஜோடியாக கேரளாவை சேர்ந்த மிருதுளா மேரி நடித்து இருக்கிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராதாரவி, ஜெயப்பிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

என் இசையில், டி.இமான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ``என் மனசுக்குள்ள நீ புகுந்து...'' என்று தொடங்கும் அந்த பாடலை ரூ.40 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படமாக்கியிருக்கிறோம். சென்னை, புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. தந்தை-மகன் இடையேயான பாசப் பிணைப்பை சொல்லும் படம், இது. இதில் நானும், உமாபதியும் தந்தை-மகனாகவே நடித்து இருக்கிறோம்.

இந்த படத்தை எல்லோரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், `யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.'' 
Tags:    

Similar News