சினிமா

பெண் குரலில் இளையராஜா பாட்டு

Published On 2019-02-25 17:38 GMT   |   Update On 2019-02-25 17:38 GMT
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.

கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.

"இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.

அவர் கூறுகிறார்:-

"கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.

அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.

இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.

ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.

அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.

அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.

மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.

அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.

அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.

இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.

இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.

டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.

சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.

இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.

1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்

பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்

ஒனப்பத் தட்டும் தாரேன்

ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்

மாட்டப் பாத்து குத்து''

 - இது அண்ணன்.

"ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க

ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க

ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள

ஒழிச்சிக் கட்டப் போறோம்''

- இது நான்.

இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?

இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி

இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

Tags:    

Similar News