சினிமா

"அன்னக்கிளி'' இசை அமைப்பு: இளையராஜாவுக்கு ராஜ்குமார் பாராட்டு

Published On 2017-06-03 16:27 GMT   |   Update On 2017-06-03 16:27 GMT
"அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.
"அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.

"அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-

"அன்னக்கிளி'' ரிலீஸ் ஆனபோது, மூகாம்பிகை கோவிலுக்குப் போகத் திட்டமிட்டேன். முடியவில்லை. 100-வது நாளுக்கும் போகமுடியவில்லை. 150-வது நாள், 175-வது நாள் (வெள்ளி விழா) எதற்கும் போக இயலவில்லை. `இனி அம்மா கூப்பிட்டால்தான் போகமுடியும்' என்று தீர்மானித்து, முயற்சி செய்வதை விட்டுவிட்டேன்.

ராஜ்குமார் ஷெனாய் வித்வானாக நடித்த "ஷெனாதி அப்பண்ணா'' என்ற படத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார்.

இந்தப் படத்தில், ஷெனாய் வாசிக்க பிரபல ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் வந்திருந்தார். அவர் இதுவரை எந்த சினிமா படத்துக்கும் ஷெனாய் வாசித்ததில்லை. ஷெனாய் வித்வானைப்பற்றிய கதை என்பதால், அவர் ஒப்புக்கொண்டிருக்கலாம்.

அந்தப் படத்திற்கு நான் ஜி.கே.வி.யுடன் பணியாற்றியபோது, என்னை பிஸ்மில்லாகானுக்கு ஜி.கே.வி. அறிமுகப்படுத்தி வைத்தார். "என் சிஷ்யன்; இப்போது இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார்'' என்றார்.

நான், பிஸ்மில்லாகானின் காலில் விழுந்து வணங்கினேன். அவர் ஆசி கூறினார்.

அந்தக் காலக்கட்டத்தில், எல்லா நேரமும் ஜெமினி ஸ்டூடியோவிலேயே கிடந்தேன். இசை ஆறாக - நதியாக ஓடி, சங்கீத சாகரத்தில் கலக்கும் அழகை ரசித்தேன்.

பிஸ்மில்லாகான் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருப்பார். திடீரென்று நிறுத்திவிடுவார். ஒரு துண்டை விரித்து நமாஸ் (தொழுகை) செய்வார். ஒரு நாளில் 6 முறை தொழுகை நடத்தும் ஒழுக்கத்தை அவர் கடைப்பிடித்து வந்தார். ஒருநாள்கூட, இந்த வழக்கத்தை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.

ஒருநாள், ராஜ்குமாரின் பாடலை பதிவு செய்ய பிரசாத் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சற்று நேரத்தில் ராஜ்குமார் அண்ணா வந்துவிட்டார். பாடலை கையில் வாங்கிக்கொண்டார்.

ஜி.கே.வி. ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருக்க, அவருக்கு நேரே எதிர்த்தாற்போல் ராஜ்குமார் அமர்ந்திருந்தார். ஜி.கே.வி.யின் வலது புறம் நான். மறுபுறம் தபேலா கன்னையா, `டோலக்' பாலா.

ஜி.கே.வி. பாட ஆரம்பித்தார். ராஜ்குமார் அண்ணா, பாடலை கவனிக்கவே இல்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

எனக்கு கூச்சமாக இருந்தது. ஜி.கே.வி.யின் பாடலுக்கு தக்கபடி நான் வாத்தியம் வாசிக்க அது இடைïறாகவும் இருந்தது.

ராஜ்குமார் "எல்லாம் கடவுள் செயல்'' என்பது போல மேலே கையைக்காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டார். பிறகு, "எல்லிநோடிதரு நின் ஹெசுரே கனோ'' (எங்கு பார்த்தாலும் உன் பெயர்தானப்பா) என்றார்.

எனக்குக் கூச்சம் அதிகமாயிற்று. "அண்ணா! பாட்டைப் பார்க்கலாம் அண்ணா!'' என்றேன்.

அப்போது ராஜ்குமாரைப் பார்த்து ஜி.கே.வி, "ஆமா, ஆமா முத்துராஜ்! பேரு பெரிய பேருதான்'' என்றார்.

பிறகு ஒரு வழியாக, ராஜ்குமார் பாடுவதற்குத் தயாரானார்.

அவர் பாடலை பதிவு செய்தோம்.

"அன்னக்கிளி'' மிகப்பிரபலமான போதிலும், நான் இசை அமைப்பாளர்கள் இடையே பத்தோடு பதினொன்றாக இருப்பேன் என்றுதான் நினைத்தேன். அதற்கு மேல் நினைக்கவில்லை.

"இரண்டாவது படம் வந்தால் மூகாம்பிகை போகலாம்'' என்று நினைத்தேன்.

இந்த சமயத்தில், மனைவி ஜீவா, இரண்டாவது பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். இந்த முறை அடிக்கடி போய் பார்த்துக்கொண்டேன். பெண் குழந்தை பிறந்தது.

இந்த நேரம், "பாலூட்டி வளர்த்த கிளி'' என்ற படத்துக்கு இசை அமைக்க, எனக்கு டைரக்டர் மாதவனிடம் இருந்து அழைப்பு வந்தது. "பெண் குழந்தை பிறந்த ராசி'' என்று அம்மா கூறினார்கள்.

அருண்பிரசாத் மூவிஸ் பேனரில் இப்படம் தயாராகியது. பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். கதாநாயகி ஸ்ரீபிரியா பாடுவதுபோல் "கொலை கொலையா முந்திரிக்கா'' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார்.

"அண்ணே! எனக்காக நீங்கள் எழுதும் முதல் பாட்டு இது!'' என்று நினைவூட்டினேன்.

"அதனால்தான், இந்தப் பாடலின் நடுவே, `வா, ராஜா வா' என்று வருமாறு எழுதியிருக்கிறேன்'' என்றார், கவிஞர்.

"உங்கள் ஆசி அண்ணே'' என்று மகிழ்ச்சியோடு கூறினேன்.

பி.மாதவன் தயாரித்த இந்தப் படத்தை, தேவராஜ் - மோகன் இயக்கினர். விஜயகுமார் - ஸ்ரீபிரியா நடித்தனர். வசனம்: கோமல் சாமிநாதன்.

20-8-76 அன்று வெளிவந்த "பாலூட்டி வளர்த்த கிளி'' சரியாக ஓடவில்லை. "கிளியின் அருமையான இசை'' என்றெல்லாம் மாதவன் சார் விளம்பரம் செய்து பார்த்தார், பலன் இல்லை.

Tags:    

Similar News