சினிமா

இளையராஜா இசை அமைத்த முதல் படம் அன்னக்கிளி மாபெரும் வெற்றி

Published On 2016-04-28 17:31 GMT   |   Update On 2016-04-28 17:31 GMT
சிவகுமார் - சுஜாதா இணைந்து நடித்த இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி.'' இதில் சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்தனர்.
சிவகுமார் - சுஜாதா இணைந்து நடித்த இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி.'' இதில் சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்தனர்.

திருமணத்துக்குப்பிறகு, 1975-ல் "எங்க பாட்டன் சொத்து'', "புதுவெள்ளம்'', "மேல்நாட்டு மருமகள்'', "தங்கத்திலே வைரம்'' உள்பட 10 படங்களில் சிவகுமார் நடித்தார்.

இவற்றில், "மேல்நாட்டு மருமகள்'' படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கினார். சிவகுமாருக்கு ஜோடியாக மேல்நாட்டுப் பெண்ணே நடித்தார். படத்தில் அவர் தமிழ்ப்பெண் போல உடையணிந்து, பரதநாட்டியம் ஆடி அசத்தினார்.

இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர், குன்னக்குடி வைத்தியநாதன். ஏற்கனவே, காரைக்கால் அம்மையார் படத்தில் "தகதகதக தகதக என ஆடவா'' பாடலுக்கு இசை அமைத்து மிக புகழ் பெற்று விளங்கிய அவர், இந்தப் படத்தில் பிரபல "பாப்'' இசைப் பாடகி உஷா உதூப்பை பாட வைத்தது குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் ஆடிய நடனம் ஒன்றும் இடம் பெற்று இருந்தது.

சிவகுமார் நடித்த மிக முக்கியமான படங்களில் ஒன்று "அன்னக்கிளி.'' இளையராஜா முதன் முதலாக இசை அமைத்த படம் இதுதான். பாடல்கள் எல்லாம் மிகப் பிரமாதமாக அமைந்ததால், இளையராஜா சீசன் தொடங்கியது.

சிவகுமாரும், சுஜாதாவும் இணைந்து நடித்த இந்தப் படம் பஞ்சு அருணாசலம் தயாரித்ததாகும். டைரக்ஷனை தேவராஜ் - மோகன் கவனித்தனர்.

மலையடிவாரம், வயல்வெளி, ஆற்றுப்படுகை என, படம் முழுவதும் வெளிப்புறத்திலேயே படமாக்கப்பட்டது.

1976 மே 14-ந்தேதி படம் வெளியாயிற்று. முதல் இரண்டு நாட்கள், "ஹவுஸ்புல்'' ஆகவில்லை. படம் நன்றாக இருப்பதாக, பார்த்தவர்கள் செய்த வாய்மொழி விமர்சனங்கள் பரவப் பரவ கூட்டம் அதிகரித்தது. பிறகு தினமும் ஹவுஸ்புல்தான்!

பல ஊர்களில் இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. கோவை இருதயா தியேட்டரில் 205 நாட்கள் ஓடியது.

படத்தின் இடைவேளைக்குப்பிறகு, "சொந்தமில்லை, பந்தமில்லை வாடுது ஒரு பறவை'' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. பி.சுசீலா பாடிய இப்பாடல், 2-ம் நாள் நீக்கப்பட்டது.

இசைத்தட்டில் இப்பாடலைக் கேட்ட ரசிகர்கள், படத்தில் பாடல் இடம் பெறாததைக் கண்டு கலாட்டா செய்தனர். அதனால், அந்தப்பாடல் காட்சி மீண்டும் சேர்க்கப்பட்டது.

சிவகுமார் நடித்து இதே ஆண்டு வெளியான "பத்ரகாளி'' மற்றொரு "சூப்பர் ஹிட்'' படம்.

ஆனால், படம் வெளி வருவதில் எதிர்பாராத சோதனை ஏற்பட்டது. படம் 5 ஆயிரம் அடி வளர்ந்திருந்த சமயத்தில், கதாநாயகி ராணி சந்திரா, மும்பை விமான நிலையத்தில் நடந்த விபத்தில் பலியாகி விட்டார். இதனால் படத்தை எப்படி முடிப்பது என்று பட அதிபரும், டைரக்டருமான ஏ.சி.திருலோகசந்தர் கலங்கிப்போனார்.

இதுபற்றி சிவகுமார் கூறியதாவது:-

"துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு மும்பை திரும்பிய ராணி சந்திரா, மறுநாள் அமெரிக்கா புறப்பட வேண்டும். ஆகவே அன்றிரவே சென்னை சென்றுவிட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு பயணமாக விரும்பிய அவர், விமானத்தில் ஏறினார்.

200 அடி கூட பறந்திராத விமானம் தீப்பற்றி எரிந்து, ராணி சந்திரா உள்பட பயணிகள் பலியாயினர்.

"தமிழ்நாட்டு ரசிகர்கள் தங்கமானவர்கள். கலையை உயிராக நேசிப்பவர்கள். நான்கு படங்கள் நடித்த பின், சென்னையிலேயே வீடு வாங்கி, குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்று பலமுறை என்னிடம் கூறிய ராணி சந்திராவின் கனவுகள் கானல் நீராகிவிட்டன.

இந்தப் படத்தை பெரிதாக நம்பியிருந்தார், டைரக்டர். கறுப்பு வெள்ளை படமாக இருந்தாலும், ரசித்து ரசித்துப் படமாக்கினார். விபத்து பற்றி அறிந்ததும் கலங்கிப் போனார். வீட்டுக்குச் சென்று, அவரை சமாதானப்படுத்தினேன். "எப்படியும் படத்தை முடித்து விடலாம், சார்'' என்றேன்.

"எப்படி சிவகுமார் முடியும்? படத்தில் மூன்றில் ஒரு பங்கு பாக்கியிருக்கிறது. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி இருக்கிறது. அவர் இல்லாமல் இக்காட்சிகளை எப்படி எடுப்பது? கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை'' என்று வேதனையோடு கூறினார், டைரக்டர் திருலோகசந்தர்.

மறுநாள் வருவதாகக் கூறிவிட்டு, வீடு திரும்பினேன். இரவெல்லாம், தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். ராணி சந்திரா முகச்சாயலில் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். விடியற்காலையில் ஒரு பொறி தட்டியது.

"பட்டிக்காட்டுராஜா'' படத்தில், நடனக்காட்சி ஒன்றில் என்னோடு ஆடிய பெண் புஷ்பா. "தங்கத்திலே வைரம்'' படத்திலும் சில காட்சிகள் என்னோடு நடித்திருந்தார்.

மறுநாள் காலை டைரக்டர் வீட்டுக்கு ஓடினேன். புஷ்பா பற்றி கூறினேன். படக் கம்பெனிகள் மூலமாக, அந்தப் பெண்ணின் விலாசத்தைக் கண்டுபிடித்து, அவரை அழைத்து வரச் செய்தோம்.

ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்ராயை வரவழைத்து, புஷ்பாவை படம் பிடித்துப் பார்த்தோம்.

ராணி சந்திராவுக்கும், புஷ்பாவுக்கும் கண்ணிலும், மூக்கிலும் மட்டும் சிறிது வித்தியாசம். மற்றபடி உயரம், உருவம், நெற்றி, முகத்தோற்றம் எல்லாம் ஒரே மாதிரி இருந்தன.

டைரக்டர் திருலோகசந்தர் சார், மிக சாமர்த்தியமாக ராணி சந்திராவுக்கும், புஷ்பாவுக்கும் வித்தியாசம் தெரியாதபடி காட்சிகளை படமாக்கி, படத்தை முடித்தார்.''

இவ்வாறு சிவகுமார் கூறினார்.

திரையிட்ட இடங்களில் எல்லாம் வெள்ளி விழா கொண்டாடியது "பத்ரகாளி.''

இறந்து போன கதாநாயகிக்கு பதிலாக இன்னொரு பெண்ணை வைத்து, வித்தியாசம் தெரியாமல் பல காட்சிகளைப் படமாக்கி வெற்றி பெற்றது சரித்திரச் சாதனை.

இதே ஆண்டு வெளியான மற்றொரு படம் "மதன மாளிகை.''

பட அதிபர் என்.வி.ராமசாமி, மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 36 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, இந்தப் படத்தை எடுத்தார். சிவகுமார் இப்படத்தில் பல தோற்றங்களில் தோன்றினார்.

Similar News