null
120 கி.மீ. வேகம்.. ஆயுதம் தாங்கும் வசதி - அசர வைக்கும் அர்மாடோ
- இந்திய ராணுவத்திற்காக விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
- பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும்.
இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம்- அர்மாடோ (Armoured Light Specialist Vehicle-ASLV) 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிகளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம் விளங்குகிறது.
அந்த வகையில், மஹிந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் பி7 மற்றும் ஸ்டனாக் லெவல் II பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன வாகனம் என்ற வகையில், இது சிறப்பு படையினர், தீவிரவாத தடுப்பு படை, எல்லை பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும். அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் பலவித எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 215 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் வசதி மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் 1000 கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் அர்மாடோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தின் டயர்களில் காற்று இல்லாமலோ அல்லது பன்ச்சர் ஆன நிலையில்கூட 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கடினமான சூழலிலும் பயன்படுத்த ஏதுவாக இதில் செல்ஃப்-கிளீனிங் எக்சாஸ்ட் மற்றும் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் உள்ளது.
இவைதவிர அர்மாடோ மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஹம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அர்மாடோ குறித்த பதிவை தனது எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.