ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ். VI டிசையர் கார் இந்தியாவில் அறிமுகம்
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது டிசையர் காரின் பி.எஸ். VI வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவதற்கான புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கின்றன. இதனையொட்டி பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களில் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தி அறிமுகம் செய்து வருகின்றன.
இதனால் மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை சமீபத்தில் ரூ.36,000 வரை அதிகரித்தது. இதேபோன்று மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தி வருகிறது. முன்னதாக மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் மாடல்களை பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில் தற்சமயம் டிசையர் மாடலில் ஏ.ஐ.எஸ். 145 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்திருக்கிறது. இந்தியாவில் பி.எஸ். VI ரக டிசையர் பெட்ரோல் மாடல் விலை ரூ.5.82 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.9.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிசையர் மாடல் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் இன்னும் பி.எஸ். VI விதிகளுக்கு ஏற்ப மாற்றப்படவில்லை. இதற்கான காலக்கெடு மார்ச் 31, 2020 அன்று நிறைவுற இருக்கிறது.
புதிய பாதுகாப்பு விதிகளின் கீழ் கார்களில் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சென்ட்ரல் லாக்கிங், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.