ஆட்டோமொபைல்
ஹூரோ மோட்டோகார்ப் வாகனங்கள் விலையில் விரைவில் மாற்றம்
ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
உலகின் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் தனது வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
ஜனவரி 1, 2020 முதல் விலை உயர்வு அமலாகும் என்றும் மாடலுக்கு ஏற்ப வாகனங்களின் விலை எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் ரூ. 2000 வரை உயர்த்தப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.4 ரக வாகனங்களின் உற்பத்தியை சமீபத்தில் நிறுத்தியது. இதைத் தொடர்ந்து வாகனங்களை பி.எஸ்.6 தரத்தில் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்ட முதல் பி.எஸ்.6 வாகனமாக ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹீரோ மோட்டோகார்ப் வரிசையில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1, 2020 முதல் பி.எஸ்.6 வாகனங்களை விற்பனைக்கு வழங்கும் நிலையில், அவற்றின் விலை உயரும் என கூறப்படுகிறது.