ஆட்டோ டிப்ஸ்
கிரெட்டா வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் ஹூண்டாய் - எதற்கு தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 3 லட்சம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா வாடிக்கையாளருக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கிரெட்டா எஸ்.யு.வி. மாடலில் விபத்தின் போது ஏர்பேக் வேலை செய்யாததை அடுத்து இந்த நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
ஷைலேந்தர் பட்நாகர் என்ற வாடிக்கையாளர் ஆகஸ்ட் 21, 2015 வாக்கில் ஹூண்டாய் கிரெட்டா 1.6 VTVT SX+ வேரியண்டை வாங்கி இருக்கிறார். 2017 நவம்பர் 16 ஆம் தேதி ஷைலேந்தரின் கிரெட்டா மாடல் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்து டெல்லி மற்றும் பாணிபெட் நெடுஞ்சாலையில் நடைபெற்றது. விபத்தில் கார் முழுக்க பலத்த சேதங்களை எதிர்கொண்டது.
இதில் காரில் பயணம் செய்த ஓட்டுனர் தலை, முகம் மற்றும் மார்பு பகுதிகளில் மிக கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார். காரில் வைக்கப்பட்டு இருந்த ஏர்பேக் வேலை செய்யாததை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் மீது பட்நாகர் வழக்கு தொடுத்து இருந்தார். இவர் இந்த பிரச்சினையை டெல்லி மாநில நுகர்வோர் கமிஷனில் தெரிவித்து, தென் கொரிய கார் உற்பத்தியாளர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
டெல்லி மாநில நுகர்வோர் இழப்பீடு கமிஷன் பட்நாகருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதோடு, இவரின் மருத்துவ செலவீனங்களுக்காக ரூ. 2 லட்சம் இழப்பீடு, வருவாய் இழப்புக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. மேலும் மனுதாரரின் வாகனம் ரி-பிளேஸ் செய்யப்படவில்லை என்பதால், கிரெட்டா மாடல் விபத்தில் சிக்கிய நாளில் இருந்து ஆண்டுக்கு ஏழு சதவீதம் வட்டி வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து ஹூண்டாய் நிறுவனம் தேசிய நுகர்வோர் கமிஷனில் மேல்முறையீடு செய்தது. அங்கும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. எனினும், உச்ச நீதிமன்றத்திலும் ஹூண்டாய் தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.