ஆட்டோமொபைல்
வாகனங்கள்

பிஎஸ்4 ரக வாகன விற்பனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2020-06-16 11:52 IST   |   Update On 2020-06-16 11:52:00 IST
நாடு முழுக்க பிஎஸ்4 ரக வாகனங்களின் விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.



பிஎஸ்4 ரக வாகன விற்பனை மற்றும் பதிவு தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் 27-ந்தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்த உச்சநீதிமன்றம், பிஎஸ்4 ரக வாகனங்களை கொரோனா ஊரடங்கு விலக்கியபின் (மே 3) 10 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளித்தது. 

மேலும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு பதிவு செய்ய முடியாமல் இருக்கும் வாகனங்களையும் பதிவு செய்து கொள்ள அனுமதி அளித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 



இந்த வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள், மார்ச் மாதம் தாங்கள் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டு உள்ளதாக கண்டனம் தெரிவித்தனர். நாடு முழுவதும் எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் ஒரு வாகனமும் பதிவு செய்ய முடியாது. 

நாடு முழுவதும் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை மற்றும் பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வாகனங்களால் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுவதுடன், மக்களின் ஆரோக்கியத்தில் மேலும் சுமையை ஏற்றுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Similar News