ஆட்டோமொபைல்
இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ்
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பவர் பிளஸ் மாடல் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ பவர் பிளஸ் கார் பி.எஸ்.6 வெர்ஷன் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்பை படங்களில் புதிய காரில் காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் பி.எஸ்.6 பொலிரோ பவர் பிளஸ் மாடல் AIS145 பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.
புதிய பொலிரோ பவர் பிளஸ் மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக் டி70 டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 71 பி.எஸ். பவர், 195 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜினை ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் (ICAT) மூலம் சான்று பெற்றிருக்கிறது.
சமீபத்தில் பொலிரோ பவர் பிளஸ் மாடலில் டிரைவர் ஏர்பேக், பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட்பெல்ட் ரிமைண்டர், ஹை-ஸ்பீடு அலெர்ட் போன்றவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்பட்டது. முன்னதாக இந்த காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., முன்புற டிஸ்க் பிரேக், டிரைவர் சைடு சீட்பெல்ட் ரிமைன்டர் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
இந்தியாவில் பி.எஸ்.6 மஹிந்திரா பொலிரோ கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமானதும் புதிய பி.எஸ்.6 பொலிரோ பவர் பிளஸ் மாடல்களின் விலை தற்போதைய மாடலை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: Lemon Green Studios