நெருக்கடிகள் விலகும்! விடா முயற்சி விஷ்வரூப வெற்றி என்ற கொள்கை பிடிப்புடன் செயல்படும் விருச்சிக ராசியினருக்கு பிறக்கப்போகும் குரோதி வருட தமிழ் புத்தாண்டில் எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேற நல்வாழ்த்துக்கள்.
சமசப்தம குருவின் பலன்கள்:
விருச்சிக ராசிக்கு குரு 2, 5ம் அதிபதி. தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. பொதுவாக ராசியை குரு பார்க்கும் காலங்களில் சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகும். விருச்சிகத்திற்கு பரிபூரண யோகத்தை வழங்க கடமைபட்ட குரு சமசப்தம ஸ்தானம் செல்வது சுபத்தை வலுப்படுத்தும் அமைப்பு தானே. விருச்சிக ராசிக்கு சுபத்தை அதிகம் நல்கக் கூடிய குரு பகவான் மே 1, 2024 முதல் ஏழாமிடம் செல்கிறார். தனது முதல் தரமான சுப 5ம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.
6ல் குரு நின்ற காலத்தில் கடுமையாக உழைத்த உழைப்பு இப்பொழுது பணமாக காய்க்கப் போகிறது. பல விதமான நற்பலன்கள் மகிழ்சியில் ஆழ்த்தும் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.
எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும்.
பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். சிலர் முதல் மனைவி இருக்கும் போதே பணத்திற்காக மறுமணம் செய்வார்கள். 7ம் பார்வையால் ராசியை பார்க்கிறார். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித் திறமை மிளிரும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.
திருமணத் தடை நீங்கும். அடமானச் சொத்துக்கள் மீண்டு வரும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம்.
அரசு வேலைக்கு முயற்சி செய்யும் சிந்தனை தோன்றும். அரசிடமிருந்த வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சில சமூக ஆர்வலர்க்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். குருவின் 9ம் பார்வை முயற்சி ஸ்தானத்தில் பதிகிறது.
பாக்கிய பலம் அதிகரிக்கும். இறையருள் பரிபூரணமாக கிட்டும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள்.வாரிசுகளின் இடமாற்றம் நிம்மதி தரும்.
அர்தாஷ்டமச் சனியின் பலன்கள்:
விருச்சிகத்திற்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் 4ல் ஆட்சி பலம் பெற்று அர்தாஷ்டமச் சனியாக பலன் தந்து கொண்டு இருக்கிறார்.
அஷ்டமச் சனியின் பாதிப்பில் பாதி நிச்சயம் உண்டு என்றாலும் தற்போது குரு பார்வை உங்களுக்கு கவசமாக உள்ளது. சனியின் 3ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் பதிவதால் கடன்கள் பொசுங்கும். கடுமையாக உழைத்து உழைப்பிற்கான ஊதியம் நற்பெயர், அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். சிலர் கடன் பட்டு அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களால் காதல் மற்றும் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும்.
சனியின் சம சப்தம பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. வெளிநாட்டு தொழில் முயற்சி வெற்றிதரும்.நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வியாபார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும்.சொத்துகள் சேரும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.
உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம் என்பதால். கவனமாக இருப்பது நல்லது. சனியின் 10ம் பார்வை ராசியில் பதிகிறது. ராசியை குருவும் பார்க்கிறார்.
ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் புதிய முன்னேற்றம் உண்டாகும். கட்டுப்பாடற்ற சுக வாழ்க்கை கிடைக்கும். உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும்.ஒரு சிலருக்கு முன்கோபங்கள் அதிகரிக்கும்.
இதனால் தேவையற்ற பிரச்சனைகள், மன வருத்தம் ஏற்படும். அதனால் பேச்சில், செயல்பாட்டில் கவனமாக இருக்கவும்.சில பிள்ளைகள் உயர் கல்விக்கு வெளிநாட்டில், வெளியூர் விடுதியில் தங்கி படிப்பார்கள்.
பஞ்சம ராகு/லாப கேது:
5ல் ராகு, 11ல் கேது. 5ம்மிடம் என்பது அதிர்ஷ்டம், பூர்வீகம், குல தெய்வம், குழந்தைகள், காதல், பூர்வ புண்ணியம், ஆழ் மன சிந்தனை பற்றிக் கூறுமிடம். இந்த இடத்தில் நிற்கும் ராகுவால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பூர்வீகச் சொத்தில் நிச்சயம் ஒரு முடிவை தந்து விடுவார். வேற்று மத நம்பிக்கையை அதிகரிப்பார் அல்லது இறை வழிபாட்டில் ஆர்வம் குறையும்.
பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காக செல்வீர்கள். பங்குச் சந்தையில் உங்களுக்கு என்று தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். தம்பதிகளின் தேவையற்ற எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பருவ வயதினர் இனக்கவர்ச்சியால் காதல் வலையில் சிக்கி வாழ்க்கையை கேள்வி குறியாக்க கூடாது. செயற்கை கருத்தரிப்பை நாடுபவர்களுக்கு சாதகமான பலன் உண்டு.
உப ஜெய ஸ்தானமான 11ல் கேது. சுய ஜாதகத்திலும் கோட்சாரத்திலும் உப ஜெய ஸ்தானமான 11ல் எந்த கிரகம் இருந்தாலும் நன்மைகள் இரட்டிப்பாகும். தொழிலுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும்.
வீடு, வாகனம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும்.தன வரவு அதிகரிக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் நன்மை தரும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலால் ஆதாயம் அதிகரிக்கும். மன அமைதி தரும் புண்ணிய யாத்திரைகள் சென்று வருவீர்கள். 11ம் மிடத்திற்கு குருப்பார்வையும் உள்ளதால் மறு விவாகம் முயற்சி பலன்தரும். ஏற்கனவே திருமணம் நடந்தவர்களுக்கு எதிர்பாலின நட்பால் வாழ்க்கை தடம் புரளாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
விசாகம் 4:
குருவின் விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் பாக்கிய பலன்கள் மிளிரும் வருடம். இது வரை உங்கள் வாழ்வில் தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் உங்களை தேடிவரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். வாக்கு வன்மையால் நன்மை பெருகும். உயர் கல்வி பயில்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.
தொழில் விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். உடன் பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து தொடர்பாக பேச்சு வார்த்தை நடக்கும். செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். திருமணத் தடை அகலும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை சேரும். கோர்ட், கேஸ் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.
புனித யாத்திரைகள் செல்வீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் உங்களை வழி நடத்தும் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும் ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
அனுஷம்
சனிபகவானின் அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் திருப்திகரமான புத்தாண்டாக இருக்கப் போகிறது. திருப்பு முனை யான சம்பவங்கள் நடக்கும். தொழிலை தொடர்ந்து நடத்தலாமா? இழுத்து மூடி விட்டு செல்லமா என்று கவலையுடன் இருந்த வர்களுக்கு தொழிலில் நல்ல திருப்புமுனை உண்டாகும்.
தொழில், உத்தியோகத்தில் பொறுமை, கடமை உணர்வு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். மனகுழப்பம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு திருப்தி தரும். வேலையில் நிலவிய டென்சன் குறையும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும்.
மறு மண முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்தில் நிலவிய சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு செல்வாக்கு உள்ள அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள்.
எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். சொத்துகள், வாகனங்கள் சேரும். சிவனடியார்களுக்கு உதவ மன உளைச்சல் குறையும்.
கேட்டை
புத பகவானின் ஆதிக்கம் பெற்ற கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் புதிய முயற்சிகள் வெற்றி தரும் ஆண்டாக அமையும். நெருக்கடிகள் விலகும் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும் தன வரவில் தன்னிறைவு உண்டாகும். இடப்பெயர்ச்சி ஏற்படும். கேட்டை கோட்டை கட்டும் என்பது பழமொழி. உங்களின் கனவில் லட்சியங்கள் எண்ணங்கள் அனைத்தும் கோட்டையாக பலம் பெறும்.
சுயதொழிலில் அபாரமான வளர்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய வேலையில் மனம் திருப்தியடையும்.
நிறைவான ஊதியம் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் அலைச்சல் அதிகமாகும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக்கொடுத்து செல்லவும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது.
கடன் தொகை வெகுவாக குறையும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள், வராக்கடன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். திருமண முயற்சி வெற்றி தரும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். புதன்கிழமையில் துளசி அர்ச்சனை செய்து மகா விஷ்ணுவை வணங்க சுப பலன்கள் இரட்டிப்பாகும்.
திருமணம்
2, 5ம் அதிபதியான குரு ராசிக்கு 7ல் நின்று ராசி, 3, 11ம் மிடங்களைப் பார்ப்பதால் சுய ஜாதக ரீதியான குறைகள் விலகி திருமண வாய்ப்புகள் தேடி வரும். 5 ம் அதிபதி குரு 7ல் மற்றும் 5ல் ராகு இருப்பதால் பெரும்பான்மையாக காதல் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு குருவருளும் திருவருளும் நிரம்பி இருக்கும்.
பரிகாரம்:
செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினர் குரோதி வருட தமிழ் புத்தாண்டிற்கு சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் மருதமலை முருகன் கோயில். கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார். முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது.