துலாம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:30 GMT   |   Update On 2023-12-19 05:32 GMT

ஐந்தில் வந்தது சனி! அதிர்ஷ்ட நேரம்தான் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். வீண் பழிகள் ஏற்பட்டு மனக்கவலையை அதிகரிக்கச் செய்யும். வீடு கட்டுவதில் தடைகள் ஏற்படும். வெகுதூரத்திற்கு செல்லும் யோகம் கைகூடி வருவது போல் தோன்றி, பிறகு கை நழுவிச் சென்றுவிடும். பிள்ளை களாலும் பிரச்சினைகள் வந்து சேரும். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. எதையும் துணிந்து செய்ய இயலாது.

துலாம் ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு வந்து சேரும் சனி பகவானால் நல்ல மாற்றங்கள் வரப்போகின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர். செய்தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் கூடும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். அவர்களின் கல்வி முன்னேற்றமும், கடல் தாண்டிச் செல்லும் வாய்ப்பும் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. இனிமை தரும் விதத்தில் இட மாற்றம் அமையும்.

சனியின் பார்வை பலன்!

உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 2, 7, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். இதன் விளைவாக பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதிற்கினிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். குடும்பத்தில் கெட்டிமேளம் கொட்டும் வாய்ப்பும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. அதிகாரப் பலம் பெற்றவர்கள் நட்பாவதால் சில காரியங்கள் கைகூடும்.

சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை விலகும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், படித்து முடித்தவர்கள் பட்ட மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு போன்றவை இக்காலத்தில் கைகூடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் உண்டு.

சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. தொழில் வெற்றிநடை போடும். பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பர். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். புதிய வாகனங்கள் வாங்கிப் பயணிக்கும் வாய்ப்பு கைகூடும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) சுபச்செலவுகள் அதிகரிக்கும். கைநழுவிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். வீடு கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு திருப்தி தரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு. பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வங்கிகளின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வாகனம் வாங்க, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும் நேரமிது. உறவினர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். சொத்துப்பிரச்சினை சுமுகமாக முடியும்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

உங்கள் ராசிக்கு அதிபதியானவர் சுக்ரன். அவருக்கு பகை கிரகமான குருவின் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். நிம்மதி குறையும். நேசித்தவர்களோடு கூட யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லை அகல, ஒரு சிறு தொகையை செலவிட நேரிடும்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அது மட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயம் திருப்திகரமாக இருக்காது. 'உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள். ஊர் மாற்றம், இட மாற்றம், வீடு மாற்றம் என்று மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் பிரச்சினை அதிகரிக்கும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். விலகிச்சென்ற தொழில் கூட்டாளிகள் மீண்டும் வந்திணைவர்.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பதவி மாற்றம் வரலாம். 'நிலையான வருமானம் கிடைக்கவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள்.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைக்கான ஏற்பாடு செய்திருந்தால் அது கிடைக்கும். திருமணத்திற்காக முயற்சிகள் செய்தால் அதுவும் கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் வருவதை நழுவ விட வேண்டாம். 11-ம் இடத்திற்கு வரும் கேதுவால் எதிரிகளின் பலம் குறையும். என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்துக்களால் அதிக லாபம் கிடைக்கும். சர்ப்ப ப்ரீதிகளைச் செய்வதன் மூலம் சந்தோஷ வாய்ப்புகள் அதிகம் வந்து சேரும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

ஒவ்வொரு சனிக்கிழமையும் வயதிற்கேற்ற வெற்றிலை மாலையை அனுமனுக்கு அணிவித்து வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக நாமக்கல்லில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும். செயல்பாட்டிலும் வெற்றி கிடைக்கும்.

Similar News