துலாம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2023-01-13 13:33 GMT   |   Update On 2023-01-13 13:34 GMT

வசீகரமான தோற்றம் கொண்ட துலாம் ராசியினரே இதுவரை ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தானத்தில் நின்று அர்தாஷ்டம சனியாக பலன் வழங்கிய சனி பகவான் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். தனது 3ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 11மிடமான லாப ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் தன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பஞ்சம ஸ்தான சனியின் பலன்கள்: துலாம் ராசிக்கு 4, 5ம் அதிபதியான சனி பகவான் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம், பதவி ஸ்தானம், புத்திர ஸ்தானம் சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். உங்களின் ஐந்தாம் அதிபதி சனி ஐந்தில் ஆட்சி பலம் பெறுவதால் நடக்குமா? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும்.உங்களின் துன்பங்கள், துயரங்களுக்கு விடிவு கிடைக்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை நிலவி வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைத்தற்கரிய பல நற்பலன்கள் உண்டாகும்.

இந்த இரண்டரை ஆண்டு காலம் சனி பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை வழங்கப் போகிறார். பல வருடத்திற்கு முன் வருமானம் திரட்ட பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவார்கள். இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும்.கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஓடி வரும். புத்திர பாக்கியம் உருவாகப் போகிறது. பூர்வீகம் தொடர்பான சொத்துப் பிரச்சனைகள் இழுத்தடித்த நீதிமன்ற வம்பு, வழக்குகளிலிருந்து சாதகமான தீர்ப்பு வரும். அங்காளி, பங்காளி உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.

தொழில் சிறப்பாக முன்னேற்றம் அடையும். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் முதலீட்டிற்கு தேவையான பணம் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும்.

3ம் பார்வை பலன்கள்: சனியின் 3ம் பார்வை 7மிடமான களத்திர ஸ்தானத்தில் பதிவதால் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். தம்பதிகளிடம் ஒற்றுமையும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம்.

விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.நண்பர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சம்பந்திகளுடன் ஏற்பட்ட மன பேதம் மறையும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை 11ம்மிடமான லாபஸ்தானத்திற்கு இருப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு வசந்த காலம். விவசாயம் செழிப்படையும். அரசின் மானியம் உதவிகள் கிடைக்கும். இது வரை கட்ட முடியாமல் திணறிய அசல் தொகை, வட்டியை திரும்பவும் கட்டக் கூடிய சந்தர்ப்பம் உண்டாகும். வராகடன் ஏற்பட்டு வராது என்று நினைத்த தொகை வசூலாகும். புதிய தொழிலில் கிளைகள் உருவாக்க அற்புதமான நேரம். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். புதிய தந்திரங்களை பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவார்கள். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும்.

கடன் இல்லா நிம்மதியான வாழ்விற்கு சனி பகவான் உங்களை அழைத்துச் செல்லும் நல்ல நேரம். போட்டி, பந்தயங்கள் உங்களுக்கு பெரும் வெற்றி பெற்றுத் தரும். அரசாங்க ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பாவுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.

10ம் பார்வை: சனி பகவானின் 10ம் பார்வை ராசிக்கு 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு இருப்பதால் தன வரவு மகிழ்வைத் தரும்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி மகிழ்வார்கள். உங்கள் வாக்கிற்கு குடும்ப உறவுகள் மதிப்பு கொடுப்பார்கள். விருந்து உபசாரங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வதன் மூலம் பல மகிழ்ச்சியான அனுபவங்கள், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

பேச்சில் நிதானம், தைரியம் தெம்பு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக சிரமம் எடுக்க நேரும் என்றாலும் உங்கள் பேச்சுத் திறமையால் பாதகத்தையும் சாதகமாக மாற்றி விடுவீர்கள் ஒரு சிலருக்கு வலது கண்ணில் சிறு பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரும்.தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த தடைகள் விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பலர் புதிதாக சில்லரை வியாபாரம் துவங்குபவர்கள் சில்லரை வியாபாரிகள் பலர் மொத்த விற்பனையில் ஆர்வம் காட்டுவார்கள்.

சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

ராசிக்கு 2,7ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில் இரண்டாமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு உயரும். கடன் தொல்லை குறையும். குடும்ப நலனுக்காக முன்னேற்றத்திற்காக, அதிக செலவு செய்யும் நிலை உருவாகும். புத்திர தோஷம் விலகி குழந்தை பேறு கிடைக்கும். ஓயாத உழைப்பால் அசதி மன உளைச்சல் ஏற்படும். வாக்கால் உறவுகளிடம் மன சங்கடம் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் புரிதல் குறையும். கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல நேரும்.

சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 7ம்மிடத்திலும் அதன் பிறகு ராசிக்கு 6ம் மிடத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் புகழ், அந்தஸ்து, ஆளுமை அதிகரிக்கும் நீண்ட கால கனவுகள், திட்டங்கள் நிறைவேறும். உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும். உங்களுக்குள் புதைந்த கிடந்த திறமைகள் வெளிப்படும். 7,6 மிட ராகுவால் வாக்கால், வாக்கு வாதத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையும். சில தம்பதிகள் மத்தியஸ்தர்களிடம் பேசி பிரிந்து கொள்வார்கள். ஆணவத்தால், அவசரத்தால் எடுக்கும் முடிவுகள் தொல்லை தரும் என்பதால் கவனம் தேவை. உடன் பிறந்தே கொன்ற வியாதிக்கு முற்று புள்ளி வைப்பீர்கள். எளிதான EMI முறையில் கடன் வசதி கிடைக்கும். சிலருக்கு வட்டி இல்லாத கைமாற்றுக் கடனும் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.

17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருபணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும் . பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும். ஒரு சிலருக்கு கவரவப் பதவிகள் தேடி வரும். இது வரை பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மிகுந்த அரசியல் வாதிகள் கூட தியாக மனப்பான்மை மிகுந்தவராக மாறுவார்கள். வெளிநாட்டு வேலை கிடைக்கும். சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் குடும்ப உறவுகளை பிரிய விருப்பமின்றி கிடைத்த வாய்ப்பை தவற விடுவார்கள்.

பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அண்டை அயலாருடன் சுமூகமான நிலை நீடிக்கும். சிலருக்கு வேலை மாறும் சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் மிகுதியாக இருக்கும். இடமாற்றம் அல்லது வெளிநாட்டு பயணம் ஏற்படும். கலைத் துறையினர் அதிக நற்பலன் அடைவர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து, பணம் வரும். தீர்வு காண முடியாமல் இருந்த பல வருட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொருளாதாரா முன்னேற்றம் ஏற்படும்.

30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் முறையான திட்டமிடல் மன சஞ்சலத்தை குறைக்கும். ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும். அலைச்சலும் மந்த தன்மையும் இருக்கும். லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களை நிலை தடுமாற வைக்கும். உற்றார் உறவினரிடம் பகையை வளர்க்க கூடாது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். உங்களின் விரோதிகள் உங்களை வம்பில் மாட்ட தயராக இருக்கிறார்கள் என்பதையும் மறக்க கூடாது.

திருமணம்: சனியின் 3ம் பார்வை 7ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு இருப்பதாலும் ஏழாமிடத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராகு இருப்பதாலும் ராகு ஏழாமிடத்தை விட்டு நகர்ந்த பிறகு திருமணத் தடை அகலும். திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும்.இது வரை வரன் தேடி அலைந்து அலுத்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.உங்கள் மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும்.

பெண்கள்: பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக நடக்கும். குடும்பத்தில் உங்களின் பேச்சு எடுபடும். கவுரவம் அந்தஸ்து உயரும். உங்களின் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் நடத்துவார். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்த படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: இந்த சனிப்பெயர்ச்சியில் ராசி, ஏழாமிடத்தை விட்டு கேது, ராகுவும் விலகிய பிறகு பெரும் வாழ்வியல் மாற்றம் நிகழ்வது திண்ணம். குல இஷ்ட தெய்வ வழிபாடு உங்களை சிறப்பாக வழிநடத்தும். சனிக்கிழமை ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் , ஊன முற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தால் நன்மைகள் மிகுதியாகும். சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு, பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News