சிம்மம் - குரோதி வருடம் வருட பலன்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்

Published On 2024-04-10 05:55 GMT   |   Update On 2024-04-10 06:05 GMT

தொழில் வளர்ச்சி பெருகும்! ஆன்ம பலம் நிறைந்த சிம்ம ராசியினருக்கு பிறக்கப் போகும் குரோதி வருட தமிழ் புத்தாண்டு உயர்வுகள் தரும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்.

தொழில் குருவின் பொது பலன்கள்:

பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. சிம்ம ராசிக்கு 5, 8ம் அதிபதியான குருபகவான் மே 1, 2024 முதல் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் நின்று. பலன் தரப் போகிறார். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புதிய தொழில் ஒப்பந்தம் மற்றும் ஆர்டர்கள் கிடைக்கும்.

தொழிலுக்கு அரசு அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தனது 5ம் பார்வையால் ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குருவின் 5ம் பார்வை பதிகிறது. ஊதியஉயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். தன வரவில் நிலவிய தடை தாமதம் சீராகும். 2ம் மிடத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கிறார். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதை மற்றவர்கள் தவறாக பேசுவார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.

குழந்தைகளின் முன்னேற்றம், குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு கூடும். குருவின் 7ம் பார்வை சுக ஸ்தானத்தில் பதிகிறது.

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும்.விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகி விடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுதியாகும். எதிர்ப்பார்த்த இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம் 9ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. ஆரோக்கியம் மனநிறைவு தரும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடம் ஒப்படைத்த புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.

கண்டகச் சனியின் பலன்கள்:

சிம்ம ராசிக்கு சனி பகவான் 6, 7ம் அதிபதி.ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டகச் சனியாகும். ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ராசியை பாரப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது. நட்பு ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம்.

7ம்மிடத்தில் நிற்கும் சனி பகவான் தனது 3ம் பார்வையால் 9ம்மிடம் எனும் பாக்கிய ஸ்தானத்தை பார்க்கிறார். தொழில், உத்தியோகம் மற்றும் உயர்கல்விக்காக பெற்றவர்களை, பிள்ளைகளை, குடும்பத்தை பிரிந்து பூர்வீகத்தை விட்டு வெகுதூரம் செல்ல நேரும். 7ம் பார்வையால் ராசியை பார்க்கிறார்.

நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணை, சமுதாய நட்பு ஆகியவற்றால் மன சஞ்சலம், காரியத் தடை, ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். தான் நின்ற இடத்தின் மூலமாகவும் தனது பார்வை பலத்தாலும் எந்த ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. இந்த காலத்தில் ஒருவர் எண்ணியதை குறித்த நேரத்தில் முடிப்பது சிரமம், சுப காரியங்கள் திட்டமிடுதல் நடக்காமல் போகலாம்.

கணவன்- மனைவி உறவுக்குள் இருந்த நல்லிணக்கம் குறையும். இதுவரை உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தந்த வாழ்க்கைத் துணை உங்கள் கருத்திற்கு எதிர்மறையாக செயல்பட ஆரம்பிப்பார்கள்.10ம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் அதிக நாள் வைத்தியம் செய்ய வேண்டிய நோய் தாக்கம், சொத்துகளால், தாய் வழி உறவுகளால் சங்கடங்களை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வேலை தேடுபவர்களுக்கு சரியான வேலை கிடைக்காது. பணியில், இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. நன்றாக மதிப்பெண்கள் பெற்று வந்த குழந்தைகளின் படிப்பில மந்தம் ஏற்படும். தன ஸ்தான கேது மற்றும் அஷ்டம ஸ்தான ராகுவின் பலன்கள்.

ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் வம்பு, வழக்கு அவமானம், விபத்து, கண்டம். கோர்ட், கேஸ், சர்ஜரி பற்றிக் கூறும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். எடுத்த காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும்.

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பகை ஏற்படும். தாங்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.

எதிர்பாராத மருத்துவ செலவில் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும்.தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் உண்டு. சிலர் கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். அஷ்டம ராகுவால் சிலருக்கு அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும்.

விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும்.

உடன் பிறந்தவர்களுடன் தாயை யார் பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு அதிகரிக்கும் ராகு கேதுக்கள் சாதகத்தையும், பாதகத்தையும் சேர்த்து வழங்குவதால் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

சிலர் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தொடரும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள். வெகு சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. பெரிய அளவிளான எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். உடல் நிலை சற்று மந்தமடையும்.

மகம்:

கேதுவின் நட்சத்திரமான மகம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சிந்தனை செயல் திறன் கூடும் தமிழ் புத்தாண்டாகும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். முகப் பொலிவு ஏற்படும். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உங்களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும்.

தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். இடமாற்றங்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் தகுதி திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்துடன் இணைவார். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.

கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். இரண்டாவது திருமணம் நடைபெறும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வர விரும்பிய பலன்கள் நடக்கும்.

பூரம்:

சுக்ரனின் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். இது வரை சுணங்கி கிடந்த யோசனைகள் விறுவிறுப்படையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமுதாயத்தில் கவுரவமான நிலையை அடைவீர்கள். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்தி வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய இடர்பாடுகள் விலகும்.ஆண்கள் மனைவி பெயரில் தொழில் ஆரம்பிக்கலாம்.

அரசியல் பதவியில் இருந்த முட்டுக் கட்டை விலகும். திருமண முயற்சியில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். தடைபட்ட பாகப் பிரிவினை சொத்து, பணம் வரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவி உறவில் அன்பு மிளிரும்.

பொருளாதாரத்திற்கு பிறருடைய கட்டுப்பாட்டில் இருந்த நிலை மாறும். புதிய சொந்த வீடு அமையும். தந்தையால் ஆதாயமுண்டு. புதிய வாகனம் வாங்கலாம்.சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். வீடு கட்டும் ஆர்வம் அதிகரிக்கும்.

தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். பாக்கிய பலன்களை அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடவும்.

உத்திரம் 1:

சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1 சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடம் திறமைகளை வெளிப்படுத்தும் வருடமாக அமையும். இதுவரை வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும்.

அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகளிடையே ஒற்றுமை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். கண்டகச் சனியால் வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அசையும், அசையா சொத்துக் களால் மேன்மை அடைவீர்கள். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு விலகி நல்ல புரிதல் உண்டாகும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.மற்றவர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும்.

செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும் நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும். வியாதிகள் குறைந்து நலமடைவீர்கள்.அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட குடும்பத்தில் நிம்மதி கூடும்.

 பரிகாரம்:

சிம்ம ராசியினருக்கு கோட்சார ராகு/கேது மற்றும் சனியின் சஞ்சாரம் சற்று சாதகமற்று உள்ளது. எனவே சரபேஸ்வரரை வழிபட தீவனைகள் உங்களை நெருங்காது. சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார். இவரை தினமும் ராகு காலத்தில் வழிபட கோட்சார கிரகங்க ளின் தாக்கம் அண்டாது.

Similar News