சிம்மம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:24 GMT   |   Update On 2023-12-19 05:27 GMT

வந்து விட்டது கண்டகச்சனி! வழிபாடு தேவை இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் தொழில், உத்தியோகம் போன்றவற்றில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உறவினர் வழியில் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.

சிம்ம ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். இதைக் 'கண்டகச்சனி' என்று சொல்வது வழக்கம். 'கண்டகச்சனி' என்றால் பயப்படத் தேவையில்லை.

ஆரோக்கியத் தொல்லையைக் கொடுக்கலாமே தவிர, சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பதன் மூலமும், எதையும் யோசித்துச் செய்வதன் மூலமும் மன நிம்மதி பெற முடியும்.

ஏழாமிடத்தில் சனி!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. குடும்ப உறவில் விரிசல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாடு, அல்லது வெளிமாநிலம் செல்லும் முயற்சியில் தாமதம் ஏற்படும். ஒரு சில காரியங்களில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாகக் கூட இருக்கலாம்.

சனியின் பார்வைப் பலன்கள்!

உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 1, 4, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுக ஜீவனம், வாகனம், தாய்வழி உறவு, பாக்கியம் ஆகிய அனைத்து ஆதிபத்தியங்களிலும் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிவதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகலாம். பணத்தேவை பூர்த்தியானாலும் மன நிம்மதி குறைவாகவே இருக்கும்.

சனியின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கடல்தாண்டிச் செல்வதில் தாமதங்கள் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாயின் உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். மற்றவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டால் அவர்கள் ஜாதகத்தையும் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும். அலுவலகப் பணி சார்பாக அடிக்கடி பயணங்களும் ஏற்படும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்துவிடும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) மனைகட்டிக் குடியேறும் யோகம் உண்டு. குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமாவார். எனவே, பூமி விற்பனை தொழில் செய்பவர்களுக்கு, பொருளாதார நிலை நினைக்க இயலாத அளவு உயரும். கண்டகச் சனியாக இருந்தாலும் கும்பம் சனிபகவானுக்கு சொந்த வீடு என்பதால் கெடு பலன்களைக் கொடுக்க மாட்டார். புதிய முயற்சியில் தாமதம் உருவாகலாமே தவிர கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும்.

ராகு சாரத்தில்சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறாது. பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும். சகப் பணியாளர்களிடம் உங்கள் முன்னேற்றத்தைத் தெரிவிப்பதன் மூலம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். வெளிநாட்டு வணிகத்திலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர். பணிபுரிந்தபடியே சுயதொழிலும் செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். மங்கல ஓசை மனையில் கேட்கும் நேரமிது.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது 10-ல் குரு வருவதால் பதவி மாற்றம், இடமாற்றம் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த உயர் பதவியும், வெளிநாட்டு யோகமும் கிடைக்கும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையின் மூலமும் பணம் குவியத் தொடங்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர்.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது இட மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் திருமண முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பொருளாதாரத்தில் சகஜ நிலை ஏற்படும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். ஜென்ம ராசிக்கு கேது வருவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சமூக நலனில் அக்கறை காட்டுவீர்கள். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

சனிக்கிழமை தோறும் சனி கவசம் பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக யோக பலம் பெற்ற நாளில் திருக்கடையூர் சென்று அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.

Similar News