மகரம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:42 GMT   |   Update On 2023-12-19 05:44 GMT

இரண்டில் வருகிறது சனி! நினைத்தது நிறைவேறும் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கும், 2-ம் இடத்திற்கும் அதிபதியான சனி, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பச்சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் பிரச்சினைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் தலைதூக்கும். 'மனதில் நினைத்ததை மறுகணமே செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் தீர்க்கமாக முடிவெடுத்து செய்ய இயலாது. திடீர், திடீரென குணத்திலும் மாற்றம் ஏற்படும். இக்காலத்தில் பணப்பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மகர ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக உலவி வந்த சனி பகவான், 20.12.2023 அன்று உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். இப்போது குடும்பச்சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. ஜென்மச்சனி விலகி விட்டது. இப்பொழுது நடைபெறும் குடும்பச்சனியின் ஆதிக்கத்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள் நடைபெறத் தொடங்கும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். விலகும் சனியை விரும்பி வழிபட அதற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வருவது நல்லது. சுபச்செய்திகள் வந்து சேரும் நேரம்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். எனவே குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைகூடிவரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. குறிப்பாக கல்வி முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தாய் வழி ஆதரவு திருப்தி தரும். வெளிநாட்டில் இருந்து தாய் நாட்டிற்குத் திரும்பி வர இயலாமல் தத்தளித்தவர்கள் இப்பொழுது பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நேரமாகும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது கிடைக்கும்.

சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். ஆனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் திருப்திகரமான லாபம் வந்து சேரும். இந்த நேரத்தில் ஒருசிலருக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகமும் உண்டு. இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் சேர விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு அது கைகூடும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வ நிலை உயரும். 'சேமிப்புகள் கரைகின்றதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது சேமிப்பு உயர்ந்து மகிழ்ச்சி பெருகும். இடம், பூமியால் லாபம் உண்டு. தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். இளைய சகோதரத்தின் வழியில் இனிய பலன்கள் உண்டு. வெளிநாட்டில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

அனைத்து செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும். மனக்கசப்புகள் தரும் தகவல்கள் ஒன்றி ரண்டு வரலாம். குடும்பத்தில் 3-ம் நபரால் குழப்பங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சில காரியங்கள் திட்டமிடப்படாமலேயே நடைபெற்று மகிழ்ச்சி கொடுக்கும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சனிக்கிழமை விரதங்களும், வழிபாடுகளும் நம்பிக்கையோடு செய்வதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

சகோதரர்களால் நன்மை உண்டு. குடும்பத்தினர்களுடன் புனித யாத் திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக்கொள்வதில் இருந்த தடைகளும், தாமதங்களும் அகலும். பஞ்சாயத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். தொழில் மற்றும் ஒப்பந்தங்கள் திருப்தி தரும் விதத்தில் வந்து சேரும்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கு குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். உடல்நலம் சீராகும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கல்யாண காரியங்கள் முதல் கட்டிடம் வாங்கும் முயற்சி வரை எல்லா வழிகளிலும் நன்மைகள் கிடைக்கும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் அற்புதமான பலன்களை அள்ளித்தரப் போகின்றார். ஒப்பற்ற வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடைக்கும். கற்பனையில் நீங்கள் கண்ட கனவெல்லாம் நனவாகப் போகின்றது.

கடகத்தில் குரு சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். கடல் தாண்டிச் செல்லும் யோகம் உண்டு. பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும் நேரமிது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.202025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக பணப்புழக்கம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். மகிழ்ச்சியான தகவல்கள் ஏராளமாக வந்து சேரும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிக்கப் போவதால் ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

சனிக்கிழமை தோறும் சனி பகவானை பூஜித்தும், நேசித்தும் வழிபடுவதோடு சனி பகவானுக்குரிய கவசத்தை வாசித்தும் வழிபட்டால் வளர்ச்சி கூடும். சிறப்பு வழிபாடாக பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகரை வழிபட்டால் எல்லை இல்லாத வளர்ச்சி உண்டாகும்.

Similar News