மகரம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2023-01-13 13:35 GMT   |   Update On 2023-01-13 13:35 GMT

ஏழரைச் சனியின் 3ம் பாகம்

ஸ்ரீ சனிபகவானின் ஆசி பெற்ற மகர ராசியினரே இதுவரை உங்கள் ராசியில் நின்ற சனி பகவான் 2ம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 4ம் இடமான சுக ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 8ம் இடமான ஆயுள் வம்பு, வழக்கு ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 11ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிகிறார்.

குடும்ப ஸ்தான சனியின் பலன்கள்: மகர ராசிக்கு சனி ராசி மற்றும் 2ம் அதிபதி. 2ம் அதிபதி சனி 2ல் ஆட்சி பலம் பெறப் போகிறார். ஏழரைச் சனியின் மூன்றாம் இரண்டரை ஆண்டு ஆரம்பம்.ஐந்தாண்டுகளாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறுது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல் வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியத்தை சனி பகவான் தந்து விடுவார்.

ஏழரை சனியின் மூன்றாம் பகுதி எப்படி நன்மை செய்யும் என்ற பயமும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்யும்.வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகை கிடைக்கும். பழைய சேமிப்புகள், இன்சூரன்ஸ் பாலிசிகள் முடிவடைந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும்.சுப நிகழ்வுகள் நடைபெறும் .வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை அல்லது புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நிலவிய பிணக்குகள் மறையும். உங்கள் ராசியை சனி கடந்த போது ஏற்பட்ட ஆரோக்ய குறைபாடு, கண், காது , மூக்கு , தொண்டை தொடர்பான தொடர்பான பிரச்சனைகள் மருத்துவத்தில் சீராகும். ஒரு சிலருக்கு கண் தொடர்பான சிறு அறுவை சிகிச்சையும் செய்ய நேரும்.உங்களின் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும்.

3ம் பார்வை பலன்: சனியின் 3ம் பார்வை 4ம் மிடமான சுகஸ்தானத்தில் பதிகிறது. உங்களின் சுக ஸ்தானமாகிய மேஷத்தின் அதிபதி செவ்வாயும் பகை கிரகம் என்பதால் சுப பலன்கள் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். வீடு, வாகனம் தொடர்பான உங்களின் கனவுகள் பலிதமாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வார்கள்.வங்கிகள் , நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். ஒரு சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். தாயின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக செலவு செய்ய நேரும். பள்ளி, கல்லூரியில் படிக்கும். மாணவ மாணவிகள் டிவி, சினிமா, மொபைல் போன், விளையாட்டு போன்றவற்றில் ஆர்வத்தைக் குறைத்து படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்காலம் சிறக்கும்.நல்ல மதிப்பெண் பெற சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை ராசிக்கு 8ம் இடமான சிம்மத்தில் பதிகிறது. வாக்கு ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் நிற்பதால் வாக்கில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் கூட ஆறிவிடும். நாவினால் சுட்ட புண் ஆறாது என்று வள்ளுவர் கூறி இருக்கிறார். எனவே யாரையும் கடுமையாக பேசக்கூடாது. பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலம். வக்கீல்கள், சேல்ஸ்மேன்கள் , இலக்கிய பேச்சாளர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவோர் ஆகியோருக்கு பெயர், புகழ் செல்வாக்கு மிகச் சிறப்பாக இருக்கும். மிகக் குறுகிய காலத்தில் தொழில் ரீதியான மிகப் பெரிய வளர்ச்சியை பார்ப்பார்கள். சில தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கோர்ட் படி ஏற நேரும். சிலருக்கு எப்பொழுதோ ஏற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வரும். ஆயுளுக்கு பங்கம் விளைவிக்கும் நோயால் அவதிப்படுவர்களுக்கும் ஆயுள் தீர்க்கம் . சிறு உடல் உபாதைகளால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு இருப்பதால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் மிகும். தொழிலை விரிவுபடுத்தும் தீவிர சிந்தனை இருக்கும். சிலருக்கு மறைமுக வழியில் தன லாபங்கள் இருக்கும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இளம் காதலர்களுக்கு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் நடக்கும். இரண்டாம் திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். மருத்துவ துறையில் உள்ளவர்கள், உணவுத்துறையில் உள்ளவர்கள், இது ஒரு அற்புதமான காலம். ஆடை அணிகலன்கள் விற்பனை செய்பவர், தயாரிப்பாளர்கள், அழகுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள், உடற்பயிற்சிக் கூடம், அழகு நிலையம் போன்றவற்றை நடத்துபவர்களுக்கும் வருமானம் குறிப்பிடத் தகுந்தபடி இருக்கும்.

சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

மகர ராசிக்கு 4,11ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்கடன் சுமை குறையும். வம்பு வழக்குகள் எதிர்பாராத வெற்றியைத் பெற்றுத் தரும் அல்லது விசாரணை தள்ளிப்போகும். பணம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும். நோய் நொடி நீங்கி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகள் அதி நவீன யுக்திகளால் உற்பத்தியை அதிகரித்து உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை காண்பார்கள். கால்நடைகள் மற்றும் ஸ்திர சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம், புதையல் லாட்டரி , உயில் மூலம் எதிர்பாராத வகையில் பண வரவு வரும். சிற்றின்பத்தில் நாட்டம் மிகும். காதல் விவகாரங்கள் கசந்து மன வேதனையை அதிகரிக்கும்.

சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 4ம்மிடத்திலும் அதன் பிறகு 3ம்மிடத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பல வருடங்களாக சொத்தில் ஆக்கிரப்பு செய்தவர்கள் தாமாகவே வெளியேறுவார்கள். சிலரின் குடியிருப்பில் உள்ள வாடகை தாரர்கள் மாறலாம். தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மருமகனால் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். சிலருக்கு பிறரின் பொறாமை குணத்தால் கண் திருஷ்டி உருவாகலாம்.

யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள நேரும். 17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்தது வாங்க கூடாது. உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வெளி பேச்சில் நல்லவராகவும் மனதிற்குள் வஞ்சகமும் வைத்து பேசுவார்கள். பூர்வீக சொத்து இன்று வந்து விடும் நாளை வந்து விடும் என இலவு காத்த கிளியாக நாளை கடத்த வேண்டும்.

பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கவலைகள் அகலும்.எதிர்மறை எண்ணங்கள் விலகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதரிகள் தாயின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோருவார்கள். பாகப் பிரிவினையில் சகோதர, சகோதரிகளுக்கு விட்டுக் கொடுக்கும் நிலை உருவாகும். வெளிநாட்டு கல்வி, வேலை, தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். இது வரை வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு பல மொழிப் படங்களில் வாய்ப்புகள் தேடிவரும். கடல் கடந்து சென்று கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு கிட்டும். பொருளாதார நிலையில் சிறு ஏற்றத்தாழ்வு இருக்கும்.

30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் உங்களின் செயல்களில் சுயநலப் போக்கு உருவாகும். குழப்பமான மனநிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். ஞாபக மறதி உண்டாகும்.பய உணர்வு அதிகரிக்கும். சிலருக்கு கண் பார்வை குறைவின் காரணமாக கண்ணாடி அணிவார்கள் அல்லது அறுவை சிகிச்சை செய்வார்கள் உடன் பிறந்தவர்களின் சுப செலவிற்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்குவீர்கள். சிலரின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும்.யாருக்கேனும் நன்மை செய்தால் அது உங்களுக்கு தீமையாகவே வந்து முடியும். உறவினர்களின் சொந்த விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

திருமணம்: சுய ஜாதக ரீதியாக திருமணம் நடை பெறுவதில் எவ்வளவு சிரமம் இருந்தாலும் குடும்பச் சனியின் காலம் என்பதால் திருமணத் தடை விலகி திருமணம் நடைபெறும். உங்கள் விருப்பத்திற்கும் மனதிற்கும் பிடித்த நல்ல வரன் அமையும்.

பெண்கள்: பெண்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும்.இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும் விதவிதமான நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். புகுந்த வீட்டில் உங்களின் பேச்சுக்கு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்படும். அந்தஸ்து கவுரவம் உயரும்.

பரிகாரம்: 5 ஆண்டுகளை இறைநம்பிக்கையுடன் கடந்த உங்களை மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளை கடக்க வழிபாடுகள் உதவும். தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டு வர குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து சித்தர்கள் வழிபாடு செய்தால் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கோவில் குளத்தில் உள்ள மீனுக்கு பொரி போட பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News