கடகம் - குரோதி வருடம் வருட பலன்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்

Published On 2024-04-10 05:44 GMT   |   Update On 2024-04-10 05:55 GMT

இரக்க குணம் நிறைந்த கடக ராசியினருக்கு பிறக்கும் குரோதி வருட தமிழ் புத்தாண்டு மனதை மகிழ்விக்கும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துகள்.

லாப குருவின் பலன்கள்

கடக ராசிக்கு 7, 10ம் அதிபதியானவர் குருபகவான். அவர் மே 1 2024 முதல் லாப ஸ்தானத்தில் நின்று பலன் தரப் போகிறார். அஷ்டமச் சனியால் அல்லலை அனுபவித்த கடக ராசியினருக்கு கடவுள் கண்னை திறந்துவிட்டார். இனி உங்கள் காட்டில் அடை மழைதான்.

இழந்த அனைத்து இன்பங்களையும் லாப ஸ்தான குரு மீட்டுத் தரப்போகிறார். லாப குருவின் 5ம் பார்வை 3ம்மிடத்தில் பதிகிறது. 3ம்மிடம் என்பது முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், இளைய சகோதரம் மற்றும் ஒப்பந்தங்கள் பற்றிக் கூறுமிடம். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

தொழிலில் திருப்தியான வளர்ச்சியும் வருமானமும் வந்து சேரும். தொழிலில் கைவிட்டுப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் வந்து மகிழ்ச்சியை அதிகரிக்கும். சிறிய உழைப்பில், குறைந்த முயற்சியில் விட்டதை பிடிக்கப் போகிறீர்கள். 7ம் பார்வையால் 5ம்மிடத்தை பார்ப்பதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். திருமணத்தடை அகலும். இரண்டாவது குழந்தை பிறக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்சியான விசயங்கள் நடந்து மகிழ்விக்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

விபரீத ராஜ யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. யார் அக்கவுண்டிலோ ஏற வேண்டிய பணம் உங்கள் அக்கவுண்டில் ஏறும்.அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்களைக் கூட அதிர்ஷ்டம் விரும்பும். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும்.

தனது 9ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் அஷ்டமச் சனியையும் மீறி திருமண வாய்ப்புகள் தேடி வரும். உயர்அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்த வர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். தகுதிக்கேற்ப பதவி உயர்வும், புதிய வாய்ப்புகள், பொறுப்புகள் வழங்கப்படலாம்.

அஷ்டமச் சனியின் பலன்கள்

கடக ராசிக்கு 7, 8ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 8ல் நின்று அஷ்டமச் சனியாக பலன் வழங்கிக் கொண்டு இருக்கிறார். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவது விபரீத ராஜயோகம். ஆயுள் தீர்க்கம்.

ராசிக்கு 8ல் நிற்கும் சனியின் 3ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. கிடைத்தது போதும் யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த காலம் முடிந்துவிட்டது. நான் விரும்பியதை அடைவேன் என்று முனைப்புடன் செயல்படும் காலம் இது. திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும்.அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.தொட்டது

துலங்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இருக்கும். சனியின் 7ம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. பேச்சை மூலதனமாக கொண்டவர் களுக்கு இது பொற்காலமாகும்.சிலர் வாக்கு வன்மையால் புகழ் பெறுவார்கள். மே1 வரை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிந்த குரு பார்வை இனி இல்லை என்பதை நினைவு வைத்துக் கொண்டு செயல்பட்டால் உங்கள் வாக்கு உங்களை வாழ வைக்கும். வாழ்வதும் பிறரை மனம் குளிர வைப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது.

பேச்சில் நிதானம் கவனம் தேவை. சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன் பட நேரும். சனி பகவானின் 10ம் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிகிறது. 5ம்மிடம் குலதெய்வம், குழந்தைகள், அதிர்ஷ்டம், காதல். ஆழ்மன சிந்தனை பற்றிக் கூறுமிடம் என்பதால் வீடு, வாகன யோகம், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும்.

தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

சகாய ஸ்தான கேது, பாக்கியஸ்தான ராகு

தைரிய வீரிய, பராக்ரம ஸ்தானத்தில் கேதுவும். புகழ், அந்தஸ்து, கவுரவம் பற்றிக் கூறும் பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். பூர்வீகச் சொத்தை விற்று முழுப் பணமும் வந்து சேரும்.

விற்ற பணத்தில் தாயார் சகோதரருக்கு அதிக பங்கு கொடுப்பது மன உளைச்சலை அதிகமாக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார். அதை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும்.

எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிரும். உடல் உபாதைகள் அகலும். வைத்தியம் பலன் தரும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீண் செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும். வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனாரின் ஆதரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம்.

வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது. சிலருக்கு முறையான ஆவணங்கள் இல்லாத சொத்தால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும். சிலர் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். தொழில், வேலை தொடர்பாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள்.

பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. அடமானச் சொத்துக்கள் மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். வீடு கட்டும் விருப்பம் நிறைவேறும்.புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

புனர்பூசம் 4

குரு பகவானின் புனர்பூசம் 4, கடக ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நேர்மறை ஆற்றல் பெருகும். கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும்.

உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியமாக செயல்படுவீர்கள். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். கடந்த ஒரு வருடங்களாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். ஆரோக்கிய குறைபாடு அகலும்.

மனதிலிருந்த கவலைகள் மாறும். புத்திர பாக்கியம் சித்திக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள தொழில் தொடர்பான வழக்குகள் சாதமாகும். பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். பொருளாதார பற்றாக்குறை அகலும். குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அஷ்டமச் சனியின் தாக்கம் இருப்பதால் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது முக்கியம். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் ஸ்ரீ ராமரை வழிபட நெருக்கடியான நிலை விலகும்.

பூசம்:

சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த கடக ராசியினருக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு நன்மையும், மேன்மையும் நிறைந்த வருடமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.புகழ் கொடிகட்டிப் பறக்கும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். தொழில் சிறப்பாக நடக்கும்.வருமானம் வந்து கொண்டே இருக்கும். திடீர் தன லாபம் கிடைக்கும்.

விரோதிகள் நண்பர்களாவார்கள். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தொல்லை கொடுத்த வாழ்க்கை துணையிடமிருந்து விவாகரத்து கிடைக்கும்.

வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள்.

தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. அஷ்டமச் சனியின் காலம் என்பதால் தொழில் உத்தியோகம் தொடர்பான விசயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ நன்மைகள் மிகுதியாகும்.

ஆயில்யம்:

புத பகவானின் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த கடக ராசியினருக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் வருடமாக உள்ளது. உங்கள் வாழ்வில் நிலவிய இடையூறுகள் தடை, தாமதங்கள் அகலும். இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்கள் புகழ், அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, சொல்வாக்கு வளரும். சோதனைகள் சாதனைகளாகும்.

முயற்சிகள் பலிதமாகும். தைரியம், தெம்பு அதிகரிக்கும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள்.

அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும்.சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாப குருவால் பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய பிரச்சனைகள் தீரும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ ரங்கநாதரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

திருமணம்:

லாப குருவின் பார்வை 3, 5, 7ம்மிடத்தில் பதிவதால் சுய ஜாதக வலிமை மற்றும் தசா புக்திக்கு ஏற்ப திருமணத்தை முடிவு செய்வது நல்லது.

 பரிகாரம்:

கடக ராசிக்கா ரர்கள் புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் நட்சத்தி ரத்தில் பிறந்தவர்கள் வாழ் வில் வழிபட வேண்டிய திருத்தலம் கற்கடேஸ்வரர் ஆலயம். இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர் இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

Similar News